திண்டுக்கல்: கொடைக்கானலில் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் 6 இருக்கைகளுடன் கூடிய ‘சன் ரூஃப்’ ரக புதிய மிதி படகு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் , கொடைக்கானல் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர வடிவிலான ஏரியில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், நகராட்சி நிர்வாகம் சார்பில் தலா 2 இடங்களில் படகு குழாம் அமைக்கப்பட்டு 2 இருக்கைகள், 4 இருக்கைகள் கொண்ட மிதி படகுகள், துடுப்பு படகுகள் என பல வகையான படகுகள் இயக்கப்படுகின்றன.
கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகள் ஏரியில் படகு சவாரி செய்ய அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இந்நிலையில் சுற்றுலா வளர்ச்சிக்கழகம் சார்பில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் ஒரே நேரத்தில் 6 நபர்கள் அமர்ந்து செல்லும் வகையில் ‘சன் ரூஃப்’ ரக புதிய மிதி படகு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. மொத்தம் 3 படகுகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இதில் பயணம் செய்ய 30 நிமிடத்திற்கு ரூ.500 வசூலிக்கப்படுகிறது.
இந்த படகில் வெயில் மற்றும் மழையை பொருட்படுத்தாமல் ‘சன் ரூஃப்’ பயன்படுத்தி தடையின்றி பயணிக்கலாம். ‘சன் ரூஃப்’ வேண்டாம் என்றால் மடக்கி வைத்து கொள்ளலாம். இந்த படகில் பயணம் செய்யும் 6 பேரும் மிதித்தால் (பேடல்) மட்டுமே படகு நகரும். சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் காத்திருந்து இந்த படகில் சவாரி செய்து மகிழ்கின்றனர்.
இந்த வகை படகு, சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் முதல் முறையாக கொடைக்கானல் படகு குழாமில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.