கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் விடுமுறை காரணமாக சென்னை மெரினா கடற்கரையில் நேற்று மாலை குவிந்த மக்கள் கூட்டம். | படம்: ம.பிரபு |
சென்னை: தொடர் விடுமுறை காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. கிறிஸ்துமஸ் பண்டிகை நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
அத்துடன் பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டு விடுமுறையும் தொடங்கியதால், மக்கள் பெருமளவில் சுற்றுலாத் தலங்களுக்கு சென்றனர். மெரினா கடற்கரையில் நேற்று காலை முதலே மக்கள் குடும்பம் குடும்பமாக திரண்டிருந்தனர்.
வண்டலூர் உயிரியல் பூங்காவில் விலங்குகள், பறவைகளை காண குடும்பத்துடன் திரண்ட மக்கள் கூட்டம். | படம்: எம்.முத்துகணேஷ் |
அதேபோல் வண்டலூர் உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா, பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை, கோவளம், மாமல்லபுரம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களில் கூட்டம் அலைமோதியது.
தொடர் விடுமுறை காரணமாக 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு பேருந்து, ரயில்களில் புறப்பட்டுச் சென்றதால், நகரின் சாலைகளில் வழக்கமான வாகன நெரிசல் குறைந்து இருந்தது.