“போகலாம்னு ஆசையா இருக்கு. ஆனா போகலாமான்னு தெரியலையே..?” -இப்படி இரண்டும் கலந்த கலவையாக உங்களுக்குள் ஒரு கேள்வி எழுமேயானால் அது மியான்மர் சுற்றுலா வைப் பற்றி தான் இருக்கும்..
கடந்த கால நிலையற்ற அரசியல் ஸ்திரத்தன்மை, பாதுகாப்பைப் பற்றிய பயம் போன்றவைச் சுற்றுலாவுக்கான ஓர் அற்புதமான நாடான மியான்மரை அவ்வப்போது சற்றே நம்மிடமிருந்து தள்ளி வைத்திருந்தது.
மியான்மர் அல்லது பர்மா
ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான புத்தக் கோயில்கள், இயற்கை எழில், சிறந்த கலாச்சாரமும், நீர் வளமும் நிறைந்த நாடு... பிற நாடுகளோடு ஒப்பிடுகையில் மியான்மர் சுற்றுலா நிறையவே உங்கள் பட்ஜெட்டுக்குள் அடங்கும் எனச் சொல்லலாம்.
பொன்னிறக் கோபுரங்களின் பூமி என்றழைக்கப்படும் இந்நாட்டின் தலைநகர் யாங்கூனின் மிக ரம்யமான இடம் யாங்கூன் நதிப்பகுதி.
இதன் கரையோரம் இருக்கும் உணவகங்கள் நதியையும், அதில் நடைபெறும் படகு மற்றும் கப்பல் போக்குவரத்துகளைக் கண்களுக்கு விருந்தாக்கி, வயிற்றுக்கு உணவளிக்கின்றன.
சற்றே சூரியன் மறைய மறைய, விளக்கு வெளிச்சம் உயிர் பெறும் நேரத்தில் நதியையும் நம்மையும் இணைத்து தாலாட்டும் மாலை நேர தென்றல் ஒரு சொல்ல முடியாத சுகானுபவம்.
யாங்கூனின் மிகப்பெரிய ஈர்ப்பு, மற்றும் மியான்மரின் அடையாளம் என்று அழைக்கப்படும் ஷ்வேடகன் பகோடா உலகின் புகழ்பெற்ற பழமையான, புனிதமான இடம். முழுவதும் தூய தங்கத் தகடுகளால் மூடப்பட்டு, உச்சியில் ஆயிரக்கணக்கான ரத்தினங்கள் மற்றும் வைரங்கள் பதிக்கப்பட்ட இந்த பகோடா, யாங்கூன் நகரின் எங்கிருந்து பார்த்தாலும் தெரியும் பிரம்மாண்டம் கொண்டது.
சுமார் 2600 ஆண்டுகள் பழமை யான வரலாறு கொண்ட இந்த பகோடா, புத்தரின் புனித அடையாளங்களைக் கொண்டுள்ளதாகக் கூறப் படுகிறது.
சிங்கூட்டரா என்ற சிறிய குன்றின் மீது அமைந்திருக்கும் இந்த பகோடா, மாலை நேர சூரிய வெளிச்சத்தில் தங்கக் குன்று போல் காட்சி அளிப்பது அப்படி ஓர் அழகு.
சுலேபகோடா
இது தவிர 2500 ஆண்டுகள் பழமையான சுலேபகோடா, மிகப்பெரிய சயன நிலை புத்தர் சிலை கொண்ட சௌஹாத்தி கோயில் போன்றவையும் யாங்கூனில் நீங்கள் பார்க்க வேண்டிய இடங்கள்.
திரும்பிய பக்கமெல்லாம் வெற்றிலை மெல்லும் முகங்கள், அலுவலகங்களில் கூட லுங்கியையே ஆடையாக உடுத்தி இருக்கும் மக்கள், அனைவர் முகத்திலும் அழகாகத் தடவப்பட்டிருக்கும் தனகா, “என்னப்பா வெள்ளைச்சாமி...
மார்க்கெட் நெலவரம் இன்னைக்கு என்ன?”, என்று காதுகளில் விழும் தமிழ் குரல்கள்... “அடேங்கப்பா... நம்ம ஊரு கோயில் மாதிரியே இருக்கே” என்று அசர வைக்கும் தமிழ் கோயில்கள்... இப்படி யாங்கூன் உங்களை நன்றாகவே வரவேற்கும்.
சர்க்குலர் ரயில்
உங்கள் சுற்றுலாவைத் திட்டமிடுபவர்கள் சும்மா டக் டக்கென்று அடுத்தடுத்த இடங்களுக்குப் போவது போலவே திட்டமிட்டு இருப்பார்கள். அவர்களிடம் சொல்லுங்கள், உங்கள் யாங்கூன் பயணத் திட்டத்தில் யாங்கூன் சர்க்குலர் ரயில் பயணம் இருக்க வேண்டுமென்று.
மியான்மர் மக்களின் பண்பாடு மற்றும் வாழ்க்கையை அறியவும், நகரின் அழகை ரசிக்கவும் இந்த மூன்று மணி நேர ரயில் பயணம் நிறையவே உதவும்.
பரபரப்பான உள்ளூர் சந்தைகள், மற்றும் கலாச்சார பகுதிகளின் வழியே பயணிக்கும் இந்த ரயில், உள்ளூர் மக்களின் உடை, நாகரீகம் மற்றும் மொழி போன்றவற்றை அருகே இருந்து உணர உதவும்.
நகரின் மையப்பகுதியிலிருந்து தொடங்கி சுமார் 45 கி.மீ. தொலைவைச் சுற்றி மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே இந்த ரயில் வந்துவிடும். இந்த ரயில் பயணம் முடிந்தவுடன் “பேசாம சைக்கிள்லேயே சுத்தி பார்த்திருக்கலாமோ?” என்று உங்களுக் குள்ளேயே ஒரு குரல் கேட்கும் அளவுக்கு மெதுவாகச் செல்கிறது இந்த ரயில்.
தமிழ்ச் சாப்பாடுக் கடைகள்
யாங்கூனில் இன்னும் சிறப்பான தமிழ்ச் சாப்பாடுக் கடைகள் நிறையவே கிடைக்கின்றன. “அப்பு, நல்லா அள்ளிச் சாப்பிடுங்க… இம்புட்டு கொஞ்சமா சாப்பிட்டீயன்னா, நான் வாங்குற காசு லெவிக்காதப்பு” என்ற வாஞ்சையான உபசரிப்பு கொஞ்சம் எக்ஸ்ட்ராவாக நம்மை சாப்பிட வைக்கிறது.
இன்லே ஏரி
மியான்மர் சுற்றுலா என்றாலே யாங்கூன் மட்டும்தானா? என்று நினைத்து விடாதீர்கள், நீங்கள் பார்க்கவும் அனுபவிக்கவும் இன்னும் நிறைய இருக்கின்றன. என்ன, பயணம் தான் கொஞ்சம் நீளமாகத் தெரியும்..
அடுத்ததாக நாம் அடி எடுத்து வைக்க வேண்டிய முக்கியமான இடம், இன்லே ஏரி. தலைநகர் யாங்கூனிலிருந்து சுமார் ஒன்பது மணிநேர பயணத்தில் இன்லேயை அடையலாம். ஒன்பது மணி நேரமா? என்று மலைத்துப் போகிறவர்கள் யாங்கூனிலிருந்து விமான மூலமாக Heho விமான நிலையத்தை அடைந்து அங்கிருந்து சாலை மார்க்கமாக இன்லே செல்லலாம். இன்லே உங்களுக்கு புதிது புதிதாக, இதுவரை நீங்கள் கண்டிராத, பல சுவாரசியங்களை அள்ளித்தரும்.
தண்ணீரின் மேல் விவசாயம்
உலகில் வேறு எங்கும் காண முடியாத, தண்ணீரின் மேல் விவசாயம் செய்யும் இந்த முறை யெச்சான் என்றழைக்கப்படுகிறது. பல நூறு வருடங்களுக்கு முன் தங்கள் வாழ்வாதாரத்துக்காக உள்ளூர் பகுதி மக்களால் உருவாக்கப்பட்ட இந்த வித்தியாச மான விவசாய முறை இன்றும் நம்மை மிரள வைக்கிறது.
ஏரியில் இயற்கையாகவே வளர்ந்து நிற்கும் தாவரங்கள் மற்றும் பாசி வகைகளைச் சேகரித்து மூங்கில் கம்புகளோடு இணைத்து, படுக்கைகளாக மாற்றி அவற்றை மிதக்கும் தோட்டங்களாக மாற்றுகின்றனர் .
பின்னர் மூங்கில் குச்சிகளை நங்கூரம் போல் அமைத்து நகர்ந்து விடாமல் பாதுகாத்து அவற்றில் தக்காளி, வெள்ளரி, பூண்டு, மிளகாய் போன்ற வற்றைப் பயிரிட்டு விவசாயம் செய்கிறார்கள். இதில் ஸ்பெஷல் என்ன வென்றால் இவை தண்ணீருக்கு மேல் மிதக்கும் தோட்டங்களாக இருப்பதால் மழை மற்றும் வெள்ள சேதத்தினால் பாதிப்பு ஏற்படுவதில்லை. நல்ல ஐடியாவா இருக்கில்ல?
மிதக்கும் கிராமம்
இவ்வளவு தூரம் டிராவல் பண்றோமே.. தங்கறதுக்கு? என்ற உங்கள் கேள்விக்கு, தாராளமாக இங்கே ஓரிரு இரவுகள் தங்குங்கள். மிதக்கும் தங்குமிடங்கள் உங்களை அசத்திவிடும். மிதக்கும் கிராமம், சந்தைகள், தூண்களுக்கு மேல் கட்டப்பட்ட வீடுகள் என படகு பயணம் உங்களைச் சிறப்பாக வழி நடத்தும்.
இன்லேயின் மற்றொரு சிறப்பு, தாமரைத் தண்டுகளில் இருந்து இழைகளைப் பிரித்து ஆடைகள் செய்யும் பகுதிகளைப் பார்வையிடுவது. உலகின் மிக அரிதான இயற்கை துணி என்று இது அழைக்கப்படுகிறது.
தாமரை மலர்களின் தண்டுப் பகுதியில் அடங்கியுள்ள மெல்லிய நூலிழை களில் ஒவ்வொன்றாகக் கைகளாலே பிரிக்கப்பட்டு நூலாக மாற்றப் படுகின்றது. பிறகு துணி மற்றும் ஆடை வடிவமாக உருவம் பெறுகிறது ஓர் ஆடைக்காண துணியை உருவாக்க சுமார் 10,000 தாமரைத் தண்டுகள் வரை தேவைப்படுமாம்.
பத்தாயிரம் தண்டுகள் சரி, அதைப் பிரித்து எடுக்க எத்தனை ஆயிரம் பொறுமை தேவைப்படும் என்று யோசித்துப் பாருங்கள்.இங்கே ஒற்றைக்கால் துடுப்பு களோடு மீன்பிடிக்கும் முறை நிறையவே உங்கள் கண்களில் படும்.
கைகளால் துடுப்பு போடுவதைத்தானே நாம் பார்த்திருப்போம். கைகளால் வேறு வேலை செய்து கொள்வதற்காகவோ என்னவோ இங்கே ஒற்றைக் கால்களால் துடுப்பு போட்டு படகு ஓட்டுகிறார்கள். ரொம்பவே ரசிக்க வைக்கும் இந்தத் துடுப்பு முறை, உடலின் ஒவ்வொரு பாகத்தையும் எப்படி எல்லாம் பயன்படுத்த முடியும் என்பதை நமக்குச் சொல்லி தருகிறது .
ஏரியின் குழந்தைகள்
இங்கே வாழும் மக்கள் தங்களை இன்தாக்கள் என்று பெருமையாக அழைத்துக் கொள்கிறார்கள், இதன் பொருள் ஏரியின் குழந்தைகள் என்பதாம்.
அங்கே இங்கே என்று சுற்றி நமது தங்குமிடத்துக்குத் திரும்பும் போது காணும் சூரிய அஸ்தமனத்தின் அழகு அப்படியொரு பிரமிப்பு.
ஒரு சுற்றுலா பயணி எதிர்பார்க்கக் கூடிய, எதிர்பார்ப்பதற்கு மேல், இன்லே உங்களை எல்லா விதத்திலும் மகிழ வைக்கும்.
மாண்டலே
சரி அடுத்ததாக மியான்மரின் கலாச்சாரத் தலைநகரம் யாங்கூனிலிருந்து சுமார் ஒன்பது மணி நேர சாலைப் பயணத்தில் இருக்கிறது மாண்டலே... என்னங்க இது, எங்க போகணும்னாலும் 9 மணி நேரம்னு சொல்றீங்க? என்று நீங்கள் அலுத்துகொள்வீர்களேயானால், விமான பயணமும் கிடைக்கிறது.
மாண்டலே மியான்மரின் இரண்டாவது பெரிய நகரம். மாண்டலே மலை உச்சியில் இருந்து சூரிய அஸ்தமனம் பார்ப்பது உலகின் மிகச்சிறப்பு என்று கூறப்படுகிறது.
அதே போன்று மியான்மரை ஆண்ட கடைசி அரசர்களின் பிரம்மாண்ட கோட்டை, அமரபுராவில் உள்ள உலகின் மிக நீளமான தேக்கு மரப்பாலம் மற்றும் உலகப் புகழ் பெற்ற சில பகோடாகளும் கண்டிப்பாக நீங்கள் பார்க்க வேண்டிய இடங்கள். இதைத் தவிர மற்றுமொரு பழமையான, ஆயிரக்கணக்கான புத்தக் கோயில்கள் கொண்ட வரலாற்று சிறப்பு வாய்ந்த ‘பாகன்’ஐயும் உங்கள் சுற்றுலாவில் சேர்த்துக் கொள்ளலாம்.
சுற்றுலா என்பதையும் தாண்டி நம் சொந்த பந்தங்களைப் பார்ப்பது போலவே ஓர் உணர்வு மியான்மரில் நமக்கு கிடைக்கிறது. ஒரு வழியாகச் சுற்றுலா முடிந்து ஊர் திரும்பிய போதும் தனகா தடவிய, புன்னகையில் குழைத்தெடுத்த மியான்மர் மக்களின் சிரிப்பும் மிங்கலபார் என்ற நட்பு கலந்த வாழ்த்தும் சில நாட்களுக்கு நம் கூடவே வருகிறது.
மணிப்பூர் எல்லையில் அமைந்துள்ள மோரே ஒரு முழுமையான தமிழ் கிராமம் என சொல்லலாம். அப்படியே நம்ம ஊருக்குள் நுழைந்த உணர்வை தருகிறது மோரேயின் அன்பும் உபசரிப்பும்.
அந்த காலத்து பர்மாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே முன்பு சாலை வழிப்பயணம் இருந்தது. காலப்போக்கில் அதற்கான அவசியம் இல்லாமல் போனது. பிறகு பல நூறு வருடங்களுக்குப் பிறகு இப்படி ஒரு சாலை வழிப் பாதை இருப்பதை உலகறிய செய்தது மலேசிய தொலைக்காட்சியான ஆஸ்ட்ரோ.
தமிழ் நாட்டைச் சேர்ந்த டாக்டர். ராஜாமணி, ஆஸ்ட்ரோ இந்திய நிகழ்ச்சி பிரிவின் தலைவராக இருந்தபோது ‘கோலாலம்பூர் முதல் காரைக்குடி’ என்ற தலைப்பில் மலேசியாவில் இருந்து காரைக்குடிக்கு சாலை மார்க்கமாக பயணிக்கும் நிகழ்ச்சி ஒன்றைத் தயாரித்து இந்தப் பாதையை மீண்டும் நினைவூட்டினார்.
மியான்மர் எல்லை மற்றும் மணிப்பூர் எல்லை இரண்டையும் இணைப்பது INDO MYANMAR FRIENDSHIP ROAD என்று சொல்லப்படும் ஒரு குட்டி பாலம். இங்கிருந்து மியான்மர் மக்களும் இந்திய மக்களும் ஒருவருக்கொருவர் "ஹாய்" சொல்லிக் கொள்ளலாம்.
தொடர்புக்கு - malaipa@yahoo.in