சிக்கிம் சுற்றுலா: உள்நாட்டில் ஒரு வெளிநாடு!

யாதும் ஊரே யாவரும் கேளிர்
சிக்கிம் சுற்றுலா: உள்நாட்டில் ஒரு வெளிநாடு!
Updated on
4 min read

என்ன இது டைட்டிலே வேற மாதிரியாக இருக்குதே என்று யோசிக்கிறீங்களா? லீவு விட்டாச்சு. எல்லோராலும் வெளிநாடு போக முடியாது. அதனால் உள்நாட்டிலேயே இருக்கிற ஒரு வெளிநாட்டை பார்க்கலாம்.

சிக்கிம்! - இதுதான் அந்த உள்நாட்டிலேயே இருக்கிற வெளிநாடு. இந்தியாவில் இருக்கிற சிக்கிம், அழகின் மறுபடிவம், வெளிநாட்டு தோற்றம் என்று சொல்லிக் கொண்டே போக ஏகப்பட்ட வர்ணனைகளுக்குச் சொந்தமானது.

தலைநகர் கேங் டாக். பெரும்பாலும் சுற்றுலா செல்வோர் எங்கே சுற்றலாம், எதைப் பார்க்கலாம் என்று தான் யோசிப்போம். ஆனால் கேங்டாக் செல்வோர் பேசாமல் இங்கேயே உட்கார்ந்து விடலாம் என்று முடிவெடுக்கும் அளவுக்கு ஒவ்வொரு அடியிலும் அழகை தடம் பதித்து வைத்திருக்கிறது.

எம்.ஜி. மார்க்

வெறும் பாதசாரிகள் மட்டுமே பயன்படுத்தும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ள எம்.ஜி. மார்க், பச்சை வர்ணம், குட்டி குட்டி வண்ணப் பூச்செடி தொட்டிகள், சுத்தம் மற்றும் சுகாதாரம் இவற்றையெல்லாம் ஒட்டுமொத்தமாகக் கொண்டிருக்கிறது.

ஒரு மேலை நாட்டின் கொஞ்சூண்டு பகுதியை பிய்த்துக் கொண்டு வந்து சிக்கிமில் ஒட்ட வைத்து விட்டார்கள் என்று உங்களுக்குத் தோன்றும் அளவுக்கு அத்தனை அழகு இந்த எம்.ஜி. மார்க்.

எம்.ஜி. மார்க் அழகில் மட்டுமின்றி விதவிதமான உணவகங்கள் மற்றும் சிறப்பான ஷாப்பிங்குக்கும் பொருத்தமான இடம். குளிரை அனுபவிக்க விரும்புபவர்கள், ஒரு கப் காபியோடு காலை வேளைகளில் எம். ஜி. மார்க்கின் பெஞ்சுகளில் அமர்ந்தால் போதும், உங்களுக்கு நீங்களே ஒரு ‘வெரி குட்’ சொல்லிக் கொள்வீர்கள்.

சிக்கிம் இயற்கை விரும்புவோர், மற்றும் சாகச விரும்பிகள் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கும் இடம் என சொல்லலாம். சிக்கிம் முழுக்க முழுக்க மலைப்பிரதேசம் என்பதால் ஒவ்வொரு இடத்திலிருந்து பார்க்கும் போதும், ஒவ்வொரு அழகு தெரிகிறது. இதில் நீங்கள் மிஸ் பண்ண கூடாதது, கேபிள் கார்.

தியோராலி மற்றும் தாஷிலிங் ஆகிய இரண்டு இடங்களுக்கும் இடையே பயணிக்க உதவும் இந்த ரோப் கார், மேலிருந்து பார்க்கும் போது காங்டாக்கின் வேறொரு பரிமாணத்தைக் காட்டுகிறது. அதோடு கஞ்சன்ஜங்கா மலையழகு,பனி படர்ந்த மலைகளின் காட்சி, சரிவுகளில் தெரியும் நகரின் அழகு என நிறையவே தருகிறது இந்த குறுகிய ரோப் கார் பயணம்.

கஞ்சன்சங்கா

எவரெஸ்ட் மற்றும் k2 மலைகளுக்கு அடுத்த, உலகின் மிக உயரமான மூன்றாவது சிகரம் கஞ்சன்ஜங்கா. சிக்கிம் மற்றும் நேபாள எல்லைக்குள் இருக்கிறது. சிக்கிம் மற்றும் நேபாள நாட்டினரால் புனித மலையாகக் கருதப்படும் கஞ்சன்ஜங்காவைக் காண கொஞ்ச நேரம் மலை வழி சாலைகளின் அழகோடு பயணிக்க வேண்டும்.

கஞ்சன் ஜங்காவை காண உங்களுக்கு கொஞ்சம் அதிர்ஷ்டமும் வேண்டும், ஏனென்றால் பெரும்பாலும் பனி முடியே இருக்கும் கஞ்சன்ஜங்கா பளீரென்று சூரிய வெளிச்சத்தில் சில நேரங்களில் மட்டுமே காண கிடைக்கிறது.

அடுத்ததாக சாங்மோ ஏரி. கேங்டாக்கிலிருந்து சுமார் 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சாங்மோ ஏரி, சிக்கிம் மக்களின் வழிபாட்டுத் தலமாகவும் கருதப்படுகிறது. வெவ்வேறு பருவங்களில் இந்த ஏரியின் நிறம் மாறுவதாக சொல்லப்படுகிறது.

அதனால் நீங்கள் பார்க்கும் போது என்ன நிறத்தில் இருந்தது என்பதை குறித்துக் கொள்ள தவறாதீர்கள். குளிர்காலத்தில் முற்றிலும் உறைந்து அப்படியே ஒரு பெரிய ஐஸ்கட்டியாகக் காட்சி தரும் சாங்மோ ஏரிக்குச் செல்ல, தனியாக பர்மிட் எடுக்க வேண்டும். உங்களது வாகன ஓட்டி அல்லது டூர் ஆபரேட்டரே இதைச் செய்து தருவார். இந்தப் பகுதிக்குச் செல்லும் போது யார்க் சவாரியை அனுபவிக்க தவறாதீர்கள்.

சரி, இப்போது நதுலா பாஸ்

சிக்கிமிற்கு நீங்கள் சுற்றுலா செல்ல மற்றொரு சிறப்பான காரணம் இந்த நதுலா பாஸ். இந்தியா மற்றும் திபெத்துக்கு இடையே அமைந்துள்ள நதுலாபாஸ் சில்க் ரூட் எனப்படும் பட்டுப்பாதையின் ஒரு பகுதி. இதன் சாலை மார்க்க பயணம், அய்யோ ஆபத்தை விலைக்கு வாங்குறோமோ? என்று அடிவயிற்றை அலற வைக்கிறது.

மிகக் குறைந்த வெப்பநிலை, கடுமையான பனிப்பொழிவு காரணமாக எப்போது வேண்டுமானாலும் இந்தப் பாதை மூடப்படுகிறது என்பதால் உங்கள் பயணத்தில் திட்டமிடல் மிக அவசியம். இந்திய- சீன எல்லையில் அமைந்துள்ள நதுலாபாஸில் இந்திய குடிமக்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு.

இதற்கான சிறப்பு பர்மிட் பெறுவது மிக அவசியம். ஆனாலும் இவற்றைத் தாண்டி இங்கே நீங்கள் வந்தடைந்தவுடன் காணும் பனிப்பொழிவுகள் இயற்கை காட்சிகளும், உங்களை பெருமையாக பிறருக்கு விவரிக்க வைக்கும்.

சிக்கிமில் நீங்கள் மறக்காமல் காண வேண்டிய மற்றொரு இடம் சிக்கிம் தோட்ட கலைத்துறை பூங்கா. இங்கே நுழைந்ததும் கண்களுக்கும் மனதுக்கும் ஒரு இதம் கிடைக்கும் பாருங்களேன், சும்மா அப்படி இருக்கும். யாரோ நம்மை அலேக்காகத் தூக்கிக்கொண்டு போய் ஒரு பெரிய பூ கூடைக்குள் உட்கார வைத்தது போல செம ஃபீலிங்.

இங்குள்ள மலர்களின் பெயர்களையும், தோற்றத்தையும் வாழ்நாளில் வேறு எங்கும் பார்த்தோ, கேட்டிருக்கவோ மாட்டோம். இங்கே ஒரு முக்கியமான தகவலைச் சொல்லியாக வேண்டும்.

சிக்கிம் இந்தியாவின் முதல் மற்றும் முழுமையான விவசாய மாநிலமாகும். இங்கே ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் என்ற பேச்சுக்கே இடமில்லை. அத்தனையும் இயற்கை உரங்கள் மட்டுமே, அதனாலேயே இங்கு விளைவிக்கப்படும் ஏலக்காய், ஆரஞ்சு போன்றவற்றுக்கு சர்வதேச சந்தையில் கடும் கிராக்கி. சிக்கிமின் கணிசமான வருவாய் இதிலிருந்தே கிடைக்கிறது.

விலங்கியல் பூங்கா

குழந்தைகளோடு சுற்றுலா செல்வோர் மற்றும் விலங்கின ஆர்வலரா நீங்கள்? அப்படியானால் உங்களுக்கானது ஹிமாலயாவின் விலங்கியல் பூங்கா. தலைநகர் கேங்டாக்கிலிருந்து மிகக் குறுகிய தூரத்திலேயே அமைந்திருக்கும் புல்புவே எனும் இடத்தில் இந்த விலங்கியல் பூங்கா அமைந்துள்ளது.

வெரி ரேர் என்று சொல்லக்கூடிய சிவப்பு பாண்டா, பனிசிறுத்தை, இமயமலை கரடி மற்றும் எண்ணற்ற வகையான பறவைகள் இங்கே கூண்டில் அடைக்கப்படாமல் இயற்கையான சூழலில் வலம் வருவதை காண முடிகிறது.

இந்தியாவில் இமயமலை பகுதியில் உள்ள வனவிலங்குகளை பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட முதல் பூங்காவும் இதுவே. கேங்டாக் மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களை பார்த்த பிறகு வண்டியை, விடு ஜூட் என்று நீங்கள் ஆக்சிலேட்டரை மிதிக்க வேண்டிய இடம் யும்தாங்.

யும்தாங் பள்ளத்தாக்கு என்பதை விட மலர்களின் பள்ளத்தாக்கு என்றால் தான் நிறைய பேருக்கு தெரிகிறது. அப்படி ஒரு மயக்கும் அழகு. இங்கே மலர்களுக்குள் ஒளிந்து கிடக்கிறது. கேங்டாக்கில்லிருந்து யும்தாங் பயணிக்க நீங்கள் சற்றே மெனக்கெட வேண்டும்.

ஏனெனில் பயண தூரம் சுமார் 150 கிலோமீட்டர். அதுவும் மலைப்பகுதிகளில் பெரும்பகுதி. ஆனாலும் இருபுற இயற்கையும் இணைந்து ஓடி வருவதால் அப்படி ஒன்றும் களைப்படைய மாட்டீர்கள். மலைசிகரங்களைக் கடந்து அமைதியாகப் பாய்ந்து ஓடும் டீஸ்டா நதி, மற்றும் புனியா சூ, யும்தாங் சூ,போன்ற சிறிய ஆறுகள், புல்வெளிகள் போன்றவை நம் சோர்வை சுத்தமாய் துடைத்தெறியும்.

ஒரு வழியாய் யும்தாங்கை வந்தடைந்துவிட்டீர்களா? இப்போது பாருங்கள், இப்பகுதிக்கே உரித்தான சிறப்பு வகை மரமான ரோடோ டெண்ட்ரான் மரம் எங்கு காண்கிலும் பூத்துக்குலுங்குவதை! 24 வகைகளில் பூத்துக்குலுங்கி பள்ளத்தாக்கை வானவில் போல வர்ண கோலம் காட்டும் இம்மலர்களை காண பிப்ரவரி முதல் ஜூன் மாதங்களைத் தேர்ந்தெடுங்கள்.

இந்த பள்ளத்தாக்கிற்கா, இவ்வளவு தூர பயணம்? என்று கேட்காதீர்கள். அப்படியே இந்தப் பகுதியில் இயற்கையாக அமைந்திருக்கும் வெந்நீர் ஊற்றுகளில் ஒரு குளியல் போடுங்கள். இந்த இயற்கை வெந்நீர் ஊற்றுகளில் உறைந்திருக்கும் கனிமங்கள் உடலுக்கு இதத்தையும் வலியையும் போக்கும் வல்லமை படைத்தவை.

திரும்பி வரும்போது தவறாமல் நீங்கள் வாகனத்தை நிறுத்த வேண்டிய இடம் லாங்சுங். இந்த அழகிய மலை கிராமம் யும்தார் பள்ளத்தாக்குக்கான ஒரு என்ட்ரி பாயின்ட் மட்டுமல்லாது சமூக நல்லிணக்கம் மற்றும் கட்டுப்பாடு, ஒழுக்கத்துக்கான சிறந்த இடமாகப் போற்றப்படுகிறது.

இங்கே வாழும் மக்கள் பெரும்பாலும் திபெத்திய வம்சாவழியை சார்ந்தவர்கள். பனி படர்ந்த சிகரங்களும் மத்தியில் சிறியதும், பெரியதுமான மடாலயங்கள் நிறையவே அமைந்திருக்கின்றன. ஆல்பைன் புல்வெளிகளால் சூழப்பட்ட மலை கிராமமான லாங்சுங்கில் ஓரிரு இரவுகளாவது நீங்கள் தங்கியாக வேண்டும்.

இங்கு மிகவும் பிரம்மாண்டமான தங்குமிடம் சீசன் ஹவுஸ். காரணம் இங்கிருந்து தெரியும் யூம்தாங் பள்ளத்தாக்கின் கொள்ளை கொள்ளும் அழகு. ஆனால் home stay எனப்படும் விருந்தினர் இல்லங்கள் அன்பையும் உபசரிப்பையும் வாரி வழங்குகின்றன. ஆங்கிலத்தில் Far from the madding crowd என்று சொல்வார்கள். அதன் அர்த்தம் சிக்கிம்!

- malaipa@yahoo.in

சிக்கிம் சுற்றுலா: உள்நாட்டில் ஒரு வெளிநாடு!
பிலிப்பைன்ஸ் சுற்றுலா: புகையும் எரிமலையும் புக்கா பீச்சும்!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in