சுற்றுலா

ஐஆர்சிடிசி சார்பில் சிங்கப்பூர், மலேசியா, இலங்கைக்கு விமான சுற்றுலா

செய்திப்பிரிவு

சென்னை: ஐஆர்சிடிசி சார்பில் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை் ஆகிய பகுதிகளுக்கு சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி.) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சிங்கப்பூர், மலேசியா சுற்றுலா பயணம் வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி தொடங்குகிறது. இந்த பயணம் 8 இரவுகள், 9 பகல்கள் கொண்டதாகும். கோவையிலிருந்து விமானம் மூலம் சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் அமைந்துள்ள பெட்ரோனாஸ், பத்து குகை, கெண்டிங் உயர்நிலப் பகுதிகள், இரட்டை கோபுர சுதந்திர சதுக்கம், தேசிய நினைவுச் சின்னம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சுற்றுலா கட்டணமாக ஒரு நபருக்கு ரூ.1,50,200 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் விமானக் கட்டணம், நட்சத்திர ஹோட்டலில் தங்கும் வசதி, போக்குவரத்து, உணவு, நுழைவுக் கட்டணம், சுற்றுலா வழிகாட்டி, பயணக் காப்பீடு உள்ளிட்டவை அடங்கும். அதேபோல், இலங்கைக்கு வரும் செப்டம்பர் 24-ம் தேதி 5 இரவு, 6 பகல் கொண்ட சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

செப்டம்பர் 24-ம் தேதி கோவையிலிருந்து விமானம் மூலம் கொழும்பு, கண்டி, நுவரெலியா போன்ற நகரங்களில் அமைந்துள்ள ராமாயண புராணத்தின் முக்கியத்துவம் பெற்ற கோயில்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு கட்டணமாக ரூ.64 ஆயிரம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT