எலான் மஸ்க்கின் எக்ஸ் சமூக வலைதளம், தனது க்ரோக் ஏஐ மூலம் ஆபாசப் படங்கள் உருவாக்கப்பட்ட விவகாரத்தில் தனது தவறை ஒப்புக்கொண்டுள்ளது. மத்திய அரசின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் எக்ஸ் நிறுவனம் 600 கணக்குக்ளை முடக்கியுள்ளது.
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கடந்த ஜனவரி 2-ம் தேதி எக்ஸ் நிறுவனத்திற்கு வழங்கிய 72 மணி நேரக் கெடு இன்றுடன் முடியும் தருவாயில், க்ரோக் ஏஐ மூலம் பெண்களின் படங்களை ஆபாசமாகச் சித்தரித்த விவகாரத்தில், எக்ஸ் நிறுவனம் தனது தளத்தில் ஏற்பட்ட பாதுகாப்புக் குறைபாடுகளை ஒப்புக்கொண்டுள்ளது. இனி வரும் காலங்களில் இந்தியச் சட்டங்களுக்கு உட்பட்டு நடப்போம் என்றும் உறுதி அளித்துள்ளது.
இதனையடுத்து ஆபாசமான ப்ராம்ப்ட்களை பயன்படுத்தித் தவறான உள்ளடக்கங்களை உருவாக்கிய சுமார் 600-க்கும் மேற்பட்ட கணக்குகள் நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளன. விதிகளை மீறி உருவாக்கப்பட்ட 3,500-க்கும் அதிகமான ஆபாசப் படங்கள் மற்றும் வீடியோக்கள் தளத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளன.
இனி வரும் காலங்களில் க்ரோக் ஏஐ மூலம் ஆபாசமான அல்லது பாலியல் ரீதியான படங்களை உருவாக்க முடியாது என்பதை உறுதி செய்யும் வகையில் புதிய கட்டுப்பாடுகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் எக்ஸ் தளம் மத்திய அரசிடம் தெரிவித்துள்ளது.