குபெர்டினோ: கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிள் இண்டலிஜென்ஸ் குறித்து ஆப்பிள் நிறுவனம் அறிவித்திருந்தது. இந்நிலையில், தற்போது சிரி ஏஐ-யை அறிமுகம் செய்துள்ளது. இது பயனர்களுக்கு சிறந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப அனுபவத்தை வழங்கும் என ஆப்பிள் தெரிவித்துள்ளது.
இதை ஆப்பிள் நிறுவனத்தின் உலகளாவிய டெவலப்பர்கள் மாநாட்டில் (Worldwide Developers Conference - WWDC) ஆப்பிள் அறிமுகம் செய்தது. இந்த வருடாந்திர நிகழ்வு ஆப்பிள் சிஇஓ-வாக டிம் குக் பங்கேற்கும் கடைசி WWDC ஆக அமைந்தது.
சிரி ஏஐ அறிமுகம்: உலக அளவில் தொழில்நுட்பத்தில் ஆதிக்கம் செலுத்தும் முன்னணி நிறுவனங்கள் பல தங்களது செயற்கை நுண்ணறிவு பாட்களை அறிமுகம் செய்த சூழலில் ஆப்பிள் நிறுவனம் அதில் பின்தங்கியது. அதை பயனர்கள் விமர்சித்தனர்.
இந்த சூழலில் ‘சிரி’ விர்ச்சுவல் அசிஸ்டன்டை இன்றைய டிஜிட்டல் யுகத்துக்கு ஏற்ற வகையில் ஆப்பிள் நிறுவனம் மேம்படுத்தியுள்ளது. அந்த வகையில் சிரி ஏஐ, ஆப்பிள் இண்டலிஜென்ஸில் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது சிரி உடன் பயனர்கள் சற்று ஆழமாக உரையாட முடியும் என்று ஆப்பிள் நிறுவனத்தின் மைக் ராக்வெல் தெரிவித்துள்ளார்.
இதை செயலி மூலமும் பயன்படுத்தலாம் என ஆப்பிள் தெரிவித்துள்ளது. இதை கொண்டு பயனர்கள் பல்வேறு டாஸ்குகளை மேற்கொள்ளலாம் என மைக் தெரிவித்துள்ளார். மேலும் இதை ஆப்பிளின் பல்வேறு சாதனங்களில் பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்க்ரீன் ரீடிங் முதல் மெசேஜ்களை படித்து ரிப்ளை செய்வது வரை இதில் பல பணிகளை பயனர்கள் மேற்கொள்ளலாம் என ஆப்பிள் கூறியுள்ளது.
இந்த ஆண்டின் இறுதியில் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சீனாவில் சிரி ஏஐ அறிமுகமாகும். அதன் பின்னர் படிப்படியாக மற்ற உலக நாடுகளில் அறிமுகம் செய்யப்படும் என ஆப்பிள் தெரிவித்துள்ளது. அப்போது இதன் பயனர் அனுபவம் எப்படி உள்ளது என்பது முழுமையாக தெரியவரும்.