சென்னை: தவறுதலாக இன்ஸ்டாகிராமில் குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில், பெண் மீது தாக்குதல் நடத்திய இளைஞர் கைது செய்யப்பட்டார்.
சென்னை, திருவொற்றியூரைச் சேர்ந்த 32 வயதுடைய பெண் ஒருவர் கணவன் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். மேலும், இவர் அதே பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் வேலை செய்து வருகிறார்.
கடந்த 11-ம் தேதி மாலை அவர் வேலையில் இருந்தபோது, அங்கு வந்த இளைஞர் ஒருவர், எதற்காக எனக்கு இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்ந்து குறுஞ்செய்தி அனுப்புகிறீர்கள் என கேட்டுள்ளார்.
எனக்கு செல்போன் உபயோகப்படுத்த தெரியாது. எனது குழந்தைகள் தவறுதலாக அனுப்பியிருக்கலாம் என்று அப்பெண் கூறியும் கேட்காமல், தொடர்ந்து அந்த இளைஞர் வாக்குவாதம் செய்துள்ளார்.
இதனால், இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த அந்த இளைஞர் அப்பெண்ணை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.
இதுகுறித்து, பாதிக்கப்பட்ட பெண் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸ் விசாரணையில் புகார் அளித்த பெண்ணின் செல்போனிலிருந்து அவரது பிள்ளைகள் தவறுதலாக இன்ஸ்டாகிராமில் மெசெஜ் அனுப்பி இருந்தது தெரியவந்தது.
இருப்பினும், இந்த விவகாரம் தொடர்பாக தாக்குதல் நடத்தி தப்பிய திருவொற்றியூரைச் சேர்ந்த நரேஷ் (26) என்பவரை போலீஸார் கைது செய்தனர்.