திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள சிக்கந்தர் பாதுஷா தர்கா முகப்பில் உள்ள கல்வெட்டில் 1805 எனக் குறிப்பிட்டுள்ளதாக இணையத்தில் வைரலாகி வரும் படம்.
மதுரை: திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மலை மீதுள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் விசாரணை நடந்து வருகிறது.
இதில் சிக்கந்தர் பாதுஷா தர்கா நிர்வாகம் தரப்பில், மலை உச்சியில் உள்ள தூண் அமைந்துள்ள பகுதி தர்காவுக்கு சொந்தமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில், அத்தூண் நில அளவைக் கல் எனவும், சமணர்களின் தூண் எனவும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் பாதுஷா தர்கா முகப்பில் உள்ள கல்வெட்டில் 1805 என்று பொறிக்கப்பட்ட கல்வெட்டு புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது.
தீபத்தூண் தர்காவுக்கு சொந்தம் என உயர் நீதிமன்றத்தில் வாதிட்ட நிலையில், முகப்பு கல்வெட்டில் 1805 என்றுள்ள புகைப்பட ஆதாரம் இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து மத்திய தொல்லியல் துறையின் திருச்சி மண்டல கண்காணிப்பு அலுவலகத்தில் கேட்டபோது, “இணையத்தில் சிக்கந்தர் பாதுஷா தர்கா முகப்பு கல்வெட்டில் 1805 என்ற ஆண்டு குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம் தர்காவின் முகப்பு கட்டிடமே 1805-ல் தான் உருவானதாக கருத வாய்ப்புள்ளது.
ஆனால், தீபத்தூண் பலநூறு ஆண்டுகளுக்கு முந்தைய சமணர்கால தூண் என்று தெரிவிக்கப்படும் நிலையில், தூண் தங்களுக்கு சொந்தமானது என தர்கா நிர்வாகம் எப்படி கூறுகிறது என்ற கேள்வி எழுகிறது. அந்த புகைப்படம் உண்மைதானா எனவும், அதில் உள்ள தகவல்கள் உண்மையா என்பது குறித்தும் ஆய்வு செய்து வருகிறோம்" என்றனர்.