சென்னை: போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பரில் திறக்கப்பட்டது. இப்பேருந்து நிலையத்தின் அருகில், தாம்பரம் - செங்கல்பட்டு ரயில் பாதை இருக்கிறது.
இருப்பினும், ரயில் நிலையம் இல்லை. இதனால் இங்கு மின்சார, விரைவு ரயில்களை நிறுத்த முடியாத நிலை இருக்கிறது. இங்கு ரயில் நிலையம் அமைக்க பயணிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து, ரூ.20 கோடி மதிப்பீட்டில் வண்டலூர் - ஊரப்பாக்கம் இடையே கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்கப்படுவதற்கு தெற்கு ரயில்வே சென்னை ரயில்வே கோட்டம் கடந்த 2024-ம் ஆண்டு அக்டோபரில் ஒப்பந்தப்புள்ளி கோரியது. இதையடுத்து, ஒப்பந்தம் வழங்கப்பட்டு, ரயில் நிலைய கட்டுமானப் பணிகள் தொடங்கி, அனைத்து பணிகளும் நிறைவடைந்துவிட்டன.
3 கட்டங்களாக பணி: அதே நேரத்தில், புதிய ரயில் நிலையத்தையும் ஜிஎஸ்டி சாலை யின் மறுபுறம் அமைந்துள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தையும் இணைக்கும் வகையில், பிரம்மாண்ட ஆகாய நடை மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெறுகிறது. சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில், 3 கட்டங்களாக இந்தப் பணி மேற்கொள்ளப்படுகிறது.
இந்த நடைப்பாலத்தில் பயணிகளின் வசதிக்காக, இருபுறமும் மின்தூக்கிகள் அமைக்கப்பட உள்ளன. ஒட்டுமொத்தப் பணிகளும் இந்த மாதத்துக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சென்னை ரயில்வே கோட்ட அதிகாரி ஒருவர் கூறுகையில், “கிளாம்பாககம் ரயில் நிலைய பணிகள் நிறைவடைந்துள்ளன. அதாவது ரயில்வே தரப்பில் அனைத்து பணிகளும் நிறைவடைந்துவிட்டன. மாநில அரசு சார்பில் மேற்கொள்ளப்படும் பணி நடைபெறுகிறது. இந்நிலையம் விரைவில் திறக்கப்படும்” என்றார்.