இடம்:தூத்துக்குடி
படம்: என்.ராஜேஷ்
மேஜிக் எண் 118-ஐ எட்டமுடியாமல் தவித்து வருகிறது தவெக. விஜய் எதிர்பார்க்கும் கட்சிகள் இதுவரை பச்சைக் கொடி காட்டாததாலும், ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்காததாலும் பதற்றத்தில் தவிக்கிறது தமிழக அரசியல் களம்.
தமிழக வரலாற்றில் முதன்முறையாக தொங்கு சட்டப்பேரவை அமைந்துள்ளது. தவெகவுக்கு 108 இடங்கள் உள்ள நிலையில், காங்கிரஸ் கூட்டணிக்குள் வந்ததால் மேலும் 5 இடங்கள் கிடைத்துள்ளது. ஆனாலும், சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க தவெகவுக்கு இன்னும் 6 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை.
இந்தச் சூழலில்தான், தமிழக பொறுப்பு ஆளுநர் அர்லேகரை சந்தித்து ஆட்சியமைக்க அழைக்குமாறு கோரிக்கை வைத்தார் விஜய். ஆனாலும், பெரும்பான்மை உறுப்பினர்களின் பட்டியலை சமர்பிக்காததால், இதுவரை விஜய்யை ஆட்சியமைக்க ஆளுநர் அழைக்கவில்லை.
இது குறித்து பல்வேறு விமர்சனங்கள் வெளியான நிலையில், ஆளுநர் தரப்பில் வெளியான தகவலில், ‘தமிழக ஆளுநர், தவெக தலைவர் விஜய்யை ஆளுநர் மாளிகைக்கு அழைத்து, தமிழக சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்பது இன்றியமையாதது. ஆட்சியமைக்க தேவையான அந்தப் பெரும்பான்மை எண்ணை நீங்கள் காட்டவில்லை என ஆளுநர் விளக்கினார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில், ‘தனிப்பெரும் கட்சியாக உள்ள தவெகவை ஆளுநர் ஆட்சியமைக்க அழைத்திருக்க வேண்டும், பெரும்பான்மையை சட்டப்பேரவையில் நிரூபித்தால் போதுமானது; இதில் பாஜகவின் தூண்டுதலோடு ஆளுநர் அரசியல் செய்கிறார்’ என ஒரு சில கட்சிகள் வெளிப்படையாகவே குற்றம்சாட்டுகின்றன.
ஆனால், ‘தவெக தனிப்பெரும் கட்சியாக நாங்கள் உள்ளோம், அதனடிப்படையில் ஆட்சியமைக்க அழைப்பு விடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கவில்லை. மாறாக காங்கிரசின் 5 உறுப்பினர்கள் ஆதரவை காட்டி, தேர்தலுக்கு பிந்தைய எங்கள் கூட்டணிக்கு 113 உறுப்பினர்கள் ஆதரவு உள்ளது என குறிப்பிட்டு கோரிக்கை வைத்துள்ளார். இதன் காரணமாகவே ‘118’ பேரின் ஆதரவு கேட்கப்படுகிறது’ என ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் 3 உதாரணங்கள்:
தமிழகத்தில் இதுவரை தொங்கு சட்டப்பேரவை அமைந்தது இல்லை. 1977-ல் எம்ஜிஆர் முதன்முறையாக வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றியதுபோது அதிமுக 30.4 சதவீத வாக்குகளை பெற்றிருந்தாலும், 130 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மை பெற்றது. இதனால் எம்ஜிஆர் எந்த சிக்கலுமின்றி ஆட்சியமைத்தார். இப்போது தவெக 34.92 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தாலும், 108 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
2006 முதல் 2011 வரை கருணாநிதி தலைமையிலான திமுக, தமிழகத்தில் எந்த சிக்கலுமின்றி ‘மைனாரிட்டி’ அரசை நடத்தியது. அப்போது திமுக 96 இடங்களில் மட்டுமே வென்றிருந்தது. ஆனால், திமுகவுடனான தேர்தலுக்கு முந்தைய கூட்டணியில் காங்கிரஸ் 34, பாமக 18, சிபிஎம் 9, சிபிஐ 6 இடங்களில் வென்றிருந்ததால், அவர்கள் நிபந்தனையற்ற ஆதரவை திமுகவுக்கு வழங்கினர்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவில் வெடித்த பிரளயங்களுக்கு பின்னர், ஓபிஎஸ் பதவி விலகியதால் சசிகலா 2017 பிப்ரவரி 5-ல் அதிமுக சட்டப்பேரவைக் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின்னர் அவர் அப்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் ஆட்சியமைக்க அழைக்குமாறு கடிதம் கொடுத்தார். இந்த சமயத்தில்தான் ஓபிஎஸ் தர்மயுத்தத்தை தொடங்கினார்.
பெரும்பான்மையை நிரூபிக்க 120 எம்எல்ஏக்களுக்கும் மேலான ஆதரவு அப்போது சசிகலாவுக்கு இருந்தது. இருப்பினும் சுமார் 10 நாட்கள் சசிகலாவை ஆட்சியமைக்க அழைக்காமல் காலம் தாழ்த்தினார் ஆளுநர். பின்னர் 2017 பிப்ரவரி 14 சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியாகி, பரப்பன அக்ரஹாரம் சிறையில் சசிகலா அடைக்கப்பட்டார். அப்போதுதான் அவர் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கிவிட்டு சென்றார். இந்தச் சம்பவத்தின்போது பெரும்பான்மை இருந்தும் சசிகலாவை ஆளுநர் ஆட்சியமைக்க அழைக்காதது அப்போது கடும் விமர்சனத்து உள்ளானது.
இப்போதைய தவெக – ஆளுநர் மற்றும் பெரும்பான்மை - மைனாரிட்டி விவகாரத்தில் இந்த உதாரணங்கள் போதுமானதாக இருந்தாலும், கர்நாடகா, மஹாராஷ்டிரா, பிஹாரில் தனிப்பெரும் கட்சிகள் ஆட்சியமைக்க இயலாமல் போவதும், அடுத்தடுத்த இடங்களை பிடித்த கட்சிகள் இணைந்து ஆட்சி அமைப்பதும் அடிக்கடி நடக்கும் சம்பவங்கள் ஆகும்.
கர்நாடகாவில் 2018-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 104 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக இருந்தது. காங்கிரஸ் 80 இடங்களிலும், மதசார்பற்ற ஜனதா தளம் 37 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தது. தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் முதல்வராக பதவியேற்ற எடியூரப்பா, பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத சூழலில் பதவி விலகினார். அதன்பின்னர் வெறும் 37 இடங்களை பிடித்த மதசார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமியை முதல்வராக்கியது காங்கிரஸ். இந்த ஆட்சி 14 மாதங்கள் நீடித்தது.
இதுபோல மஹாராஷ்டிராவில் சிவசேனா கட்சியையே உடைத்து ஏக்நாத் ஷிண்டேவை முதல்வராக்கியதும், என்சிபி-யை உடைத்து அஜித் பவாரை துணை முதல்வராக்கியதும் சமீபத்தில்தான் நடந்தது. இதுபோன்ற பின்னணியில்தான் திமுக - அதிமுக கூட்டணி ஆட்சி என்ற குபீர் வியூகங்களும் இங்கே றெக்கை கட்டி பறக்கின்றன.
சசிகலா சம்பவம் தவிர்த்து தமிழகத்தில் இதுவரையில் அமைந்த அரசுகள் அனைத்தும் பெரும்பான்மை பலத்தை நிரூபித்தே ஆட்சியமைக்க கோரியதால், ஆளுநரின் தலையீடு பெரிதாக இருந்ததில்லை. ஆனால், இப்போது தவெகவால் ‘மேஜிக் எண் 118’-ஐ எட்ட முடியாத சூழலில், நிலைமை உண்மையிலேயெ தகிப்பை உருவாக்கியுள்ளது.
எவ்வளவு சீக்கிரம் ‘மேஜிக் எண் 118’-ஐ விஜய் எட்டிப்பிடிக்கிறாரோ, அவ்வளவுக்கு அவ்வளவு தமிழக அரசியல் களத்தில் பரபரப்புகள் தணியும். இதற்கு விஜய்யும் வேகமான, சாதுர்யமான முயற்சிகளை இறங்கி வந்து செய்ய வேண்டும். அதேபோல உண்டு அல்லது இல்லை என்று விசிக, இடதுசாரிகளும் தங்களின் ஆதரவு நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும். இவை நடந்தால்தான், அரசியல் வியூகங்கள் அடுத்தக் கட்டத்தை நோக்கி நகரும்.
எப்படி பார்த்தாலும், இன்னும் சில நாட்களுக்கோ, சில வாரங்களுக்கோ அல்லது தமிழகத்தில் புதிய அரசு அமையும் வரையிலோ பரபரப்புகளுக்கும், தலைப்புச் செய்திகளுக்கும் பஞ்சமிருக்காது என்பதே உண்மை.