தாம்பரம்: செங்கல்பட்டு, சோழிங்கநல்லூர், தாம்பரம் ஆகிய தொகுதிகளில் அதிமுகவும், திமுகவும் நேரடியாக மோதுகின்றன.
இந்த 3 தொகுதிகளிலும் கடந்த இரண்டு தேர்தல்களில் திமுக தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளது. இந்த தேர்தலில் செங்கல்பட்டு, தாம்பரம் தொகுதிகளில் திமுக சார்பில் புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
சோழிங்கநல்லூர் தொகுதியில் தற்போதைய எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ் மீண்டும் போட்டியிடுகிறார். கடந்த 2 தேர்தலிலும் தோல்வி அடைந்த, அதிமுகவின் கே.பி.கந்தன், 3-வது முறையாக மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளார்.
தாம்பரம் தொகுதியில் 3 முறை எம்எல்ஏவாக இருந்த எஸ்.ஆர்.ராஜாவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு, மருத்துவர் கிருத்திகா தேவி என்பவருக்கு இம்முறை சீட் வழங்கப்பட்டுள்ளது. இவரை எதிர்த்து அதிமுக சார்பில் சிட்லபாக்கம் ராஜேந்திரன் போட்டியிடுகிறார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் திமுக சார்பில், தொடர்ந்து 2 முறை வெற்றி பெற்ற வரலட்சுமிக்கு பதிலாக, நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சி தலைவராக இருந்த கார்த்திக் என்பவருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. அதிமுக தரப்பில் கஜேந்திரன் போட்டியிடுகிறார்.
இந்த 3 தொகுதிகளையும் தக்கவைக்க வேண்டும் என்ற முனைப்பில் திமுக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. கூட்டணி கட்சிகள் பலத்துடன் திமுகவிடம் இருந்து தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்ற கணக்கில் அதிமுகவும் களம் இறங்கியுள்ளது.
பாஜக , பாமக உடன் இருப்பது அதிமுகவுக்கு பலம். திமுக வாக்குகளை நடிகர் விஜய் கட்சி வேட்பாளர் கணிசமாக பிரித்து விடுவார் என்று அதிமுக கணக்கு போடுகிறது.
உட்கட்சிப் பூசல் இருந்தாலும், 3 தொகுதிகளிலும் முஸ்லிம்கள் வாக்கு கணிசமாக உள்ளதும், விசிக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் வாக்குகளும் தங்களுக்கு சாதகமாக இருக்கும் என திமுக கருதுகிறது. புதிய வரவான நடிகர் விஜய் கட்சியின் தாக்கம் மற்ற கட்சிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.