சென்னை: ‘சட்டம் - ஒழுங்கு விவகாரத்தில்தான் முதல்வர் அமைதியாக இருக்கிறார் என்றால், வள்ளுவருக்கு காவி பெயின்ட் அடிக்கும் ஆளுநரின் அநியாயத்தை தட்டிக் கேட்கவும் தயங்குவது ஏன்?’ என சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘எப்போதுமே மியூட்’டில் இருப்பவர் முதல்வராக இருக்கிறார் எனும் தைரியத்தில் ஆளுநர் மாளிகையில திருவள்ளுவருக்கு மறுபடியும் காவி பெயின்ட் அடித்துள்ளார்கள்.
தமிழ்நாடு அரசு ஜனவரி மாதத்தில் திருவள்ளுவர் நாளை அதிகாரப்பூர்வமா கொண்டாடுகிறது. ஆனால், வைகாசி அனுஷம் திருவள்ளுவர் நாள் என்று புதிதாக ஓர் உருட்டு எங்கே இருந்து வந்தது?
திமுக ஆட்சியில் இதே மாதிரி வேலையைப் பார்த்த அப்போதைய ஆளுநரை கடுமையா கண்டித்தோம். சங்கிகளை திருத்தினோம்.
இப்போது மறுபடியும் தமிழர்களின் சுயமரியாதையை உரசிப் பார்க்கிறார்கள். வள்ளுவரை அவமதிக்கும் பாசிஸ்டுகளுக்கும், அதை அனுமதிக்கும் சோஃபா மாடல் அரசுக்கும் என்னுடைய கடும் கண்டனங்கள்.
தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாட அனுமதி கொடுக்க வேண்டும் என டெல்லியில கேட்டதுபோல், இந்த விஷயத்திலும் முதல்வர் பயந்து நடுங்கக் கூடாது.
சட்டம் - ஒழுங்கு விவகாரத்தில்தான் முதல்வர் அமைதியாக இருக்கிறார் என்றால், வள்ளுவருக்கு காவி பெயின்ட் அடிக்கும் ஆளுநரின் அநியாயத்தை தட்டிக் கேட்கவும் தயங்குவது ஏன்?’ என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.