குழந்தை நட்சத்திரமாக விஜய் நடித்த முதல் படம் ‘வெற்றி’, அவர் ஆரம்பித்த கட்சியின் பெயர் தமிழக ‘வெற்றி’ கழகம். சினிமாவின் பெயர், அரசியல் கட்சியின் பெயர் இரண்டிலும் ‘வெற்றி’யை அடையாளமாக வைத்து தொடங்கிய விஜய், தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே வெற்றியையும் வசமாக்கி ஆட்சிக் கட்டிலில் அமரப்போகிறார்.
அசைக்கவே முடியாத இரும்புக் கோட்டையாக இருந்த திமுக, அதிமுகவை, அரசியலுக்கு வந்த இரண்டே வருடங்களில் அடித்து தூக்கி அரியணையில் கைப்பற்றியுள்ளார் விஜய். நடிகர்கள் நாடாளுவது எம்ஜிஆரோடு முடிந்துவிட்டது என்ற விமர்சனத்தை உடைத்து, 50 ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழகத்தில் ஆட்சியை வசமாக்கியுள்ளார் விஜய்.
யார் இந்த விஜய்?
அரசியல் விமர்சனங்களை உள்ளடக்கிய பல்வேறு படங்களை இயக்கி கவனம் ஈர்த்த எஸ்.ஏ.சந்திரசேகரின் மகன்தான் ஜோசப் விஜய். 1974-ஆம் ஆண்டு ஜூன் 22ல் பிறந்த இவர், 1984-ஆம் ஆண்டு தந்தை எஸ்.ஏ.சி-யின் ‘வெற்றி’ திரைப்படம் மூலமாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
தொடர்ந்து பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அவர் 1992-ல் ‘நாளைய தீர்ப்பு’ படம் மூலமாக கதாநாயகனாக நடிப்பை தொடங்கினார். தனது தந்தையின் படங்களில் தொடர்ந்து நடித்து வந்த விஜய், ‘பூவே உனக்காக’, ‘காதலுக்கு மரியாதை’ படங்கள் மூலமாக முன்னணி நட்சத்திரமாக மாறினார்.
அதன்பின்னர் ‘குஷி’, ‘கில்லி’, ‘போக்கிரி’ என தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து உச்ச நட்சத்திரமாகவும் உயர்ந்தார். குழந்தைகள், பெண்களின் விருப்பமான நாயகனாக திரைப்படங்களில் நடித்த அவர், இப்போது அதே பெண்கள், குழந்தைகள், இளைஞர்களின் ஆதரவோடு அரசியலிலும் உச்சம் தொட்டுள்ளார்.
விஜய் தொடக்க கால திரைப்படங்கள் முதலே அரசியல் தொடர்பான வசனங்களையும், காட்சிகளையும் தனது படங்களில் தொடர்ந்து பயன்படுத்தினார். முக்கியமாக 2010-க்கு பிறகான அவரது படங்களில் வசனங்கள், படத் தலைப்புகள், பாடல்களில் அரசியல் தொடர்பான குறியீடுகள் இடம்பெறத் தொடங்கின. இதன் காரணமாகவே ‘தலைவா’, ‘காவலன்’, ‘கத்தி’, ‘சர்க்கார்’, ‘மெர்சல்’ உள்ளிட்ட பல படங்கள் அப்போது ஆண்ட கட்சிகளால் நெருக்கடிக்கு ஆளாகின.
ஒருபக்கம் திரைப்படங்கள் மூலமாக அரசியல் ‘குறிப்பு’களை பேசிய விஜய், மறுபக்கம் 2009-ல் தனது ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றினார். மக்கள் இயக்கத்துக்கு ஒரு கொடியையும் அறிமுகப்படுத்திய விஜய், தொடர்ந்து அதன் மூலமாக நற்பணிகளையும் ஒருங்கிணைத்து மாநிலம் முழுவதும் கட்டமைப்புகளை உருவாக்கினார். இதன்பின்னர் 2011-ல் விஜய் தொடர்ச்சியான அரசியல் செயல்பாடுகளை தீவிரமாக ஆரம்பித்தார். 2011 பிப்ரவரியில் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டதற்காக நாகையில் விஜய் நடத்திய பொதுக்கூட்டம் கவனம் ஈர்த்தது.
2011 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவை எதிர்த்து அதிமுக கூட்டணிக்கு ஆதரவளித்தார். அந்த தேர்தலில் ஜெயலலிதா வெற்றிபெற்ற பின்னர், அதிமுகவின் வெற்றிக்கு ‘அணில்’ போல தன்னால் இயன்ற பங்களிப்பை வழங்கியதாகவும் தெரிவித்தார். 2011 ஆகஸ்டில் டெல்லியில் ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் நடத்திய அன்னா ஹாசாரேவுக்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார் விஜய். இந்தச் சம்பவம் விஜய்யின் அரசியல் ஆசையை வெளிச்சம் போட்டு காட்டியது.
2014 பாஜகவின் பிரதமர் வேட்பாளராக இருந்த மோடியை கோவையில் நேரில் சந்தித்து பேசியதும், அப்போது சலசலப்புகளை உருவாக்கியது. அதேபோல இப்போது வரை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியுடன் நல்ல உறவிலும் இருந்து வருகிறார் விஜய்.
2011-ல் அதிமுகவின் வெற்றிக்கு பிரச்சாரம் செய்தாலும் கூட, ‘தலைவா’ படத்தின் ‘டை டூ லீடு’ டேக்லைனால் விஜய் மீது ஜெயலலிதா கடும் கோபமடைந்தார். இதற்காக பணிவான ஒரு வீடியோவை வெளியிட்டு சமரசம் செய்தார் விஜய். இந்தச் சம்பவத்துக்கு பிறகுதான் விஜய்யின் திரைப்படங்களில் அரசியல் காரம் அதிகமாக ஆரம்பித்தது.
விஜய் மக்கள் இயக்கத்தை எஸ்ஏசி தான் தொடக்கம் முதல் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். ஒரு கட்டத்தில் மக்கள் இயக்கத்தில் அவரின் ஆதிக்கம் அதிகமானது. அதன்பின்னர் 2020-ஆம் ஆண்டு விஜய்க்கே தெரியாமல், விஜய் மக்கள் இயக்கத்தை கட்சியாகவும் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து பரபரப்பை உருவாக்கினார் எஸ்ஏசி. இதனால் கோபமடைந்த விஜய், எஸ்ஏசி தன் பெயரை பயன்படுத்தக் கூடாது என வழக்கு தொடர்ந்து பரபரப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
விஜய் மக்கள் இயக்கம் தொடங்கப்பட்டது முதலே பல்வேறு உள்ளாட்சி தேர்தல்களில் போட்டியிட்டு, பல இடங்களில் வெற்றியும் பெற்றது. இவை கொடுத்த உற்சாகமே விஜய்யை அரசியலை நோக்கி நகர்த்தியது. இதன் தொடர்ச்சியாக 2024 பிப்ரவரியில் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கிய விஜய், மைனாரிட்டி அரசே அமைக்க முடியும் என்றாலும் கூட, இரண்டே ஆண்டுகளில் தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்து அசத்தியுள்ளார்.
விஜய்யால் கட்சியை தொடங்க முடியாது என தொடக்கத்தில் சொல்லப்பட்டது; அதனை உடைத்து கட்சியை ஆரம்பித்தார். கட்சியின் கட்டமைப்பை உருவாக்கும் அனுபவம் அவருக்கு இல்லை என விமர்சனம் எழுந்தது; அதனையும் உடைத்து கட்சியை பட்டி தொட்டியெங்கும் கொண்டு சென்றார். அவரால் பிரச்சாரத்துக்கே செல்ல முடியாது; 234 தொகுதிக்கும் வேட்பாளர்கள் கூட போட முடியாது என்றெல்லாம் விமர்சிக்கப்பட்டது. இதனையெல்லாம் தகர்த்து இப்போது ஆட்சியை கைப்பற்றியுள்ளார்