சென்னை: தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் சமூக நீதி மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறைக்கான பல்வேறு திட்டங்களை அமைச்சர் மரிய வில்சன் அறிவித்துள்ளார்.
நடப்பு நிதி ஆண்டுக்கான (2026-27) பொது பட்ஜெட்டை சட்டப்பேரவையில் இன்று நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார். அதில், சமூக நீதி துறையில் வெளியான அறிவிப்புகள் விவரம்:
> அண்ணல் அம்பேத்கர் அயல்நாட்டு கல்வி உதவித் தொகை திட்டம் ரூ.131 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.
> வெற்றி தொழில்முனைவோர் திட்டத்துக்கு ரூ.75 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
> அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு தொழில் முனைவு திறன் ஊக்குவிக்கப்படும், இத்திட்டத்திற்காக ரூபாய் 125 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
> ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பெண் விவசாய தொழிலாளர்களை நில உரிமையாளர்களாக மாற்றும் நோக்குடன் மண்ணின் மகள் திட்டத்திற்கு ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
> அயோத்திதாச பண்டிதர் வாழ்விட மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
> பழங்குடியினர் குடியிருப்புகள் வீடுகள், பள்ளிகள், விடுதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் ஆன்றோர் மேம்பாட்டு திட்டம் ரூ.250 கோடியில் மேம்படுத்தப்படும்.
> ஆதிதிராவிடர்களுக்கான சிறப்பு கூறுகள் திட்டத்தின் கீழ் ரூ.25,225 கோடியும், பழங்குடியினருக்கான துணைத் திட்டத்தின் கீழ் 2,079 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
> திருத்த வரவு - செலவு திட்ட மதிப்பீடுகளில் சமூக நீதித்துறைக்கு ரூ.3,935 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் துறையில் வெளியான அறிவிப்புகள் விவரம்:
> தமிழ்நாட்டில் 69 சதவீத இட ஒதுக்கீடு உறுதிப்படுத்தப்படும். பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாணவர்கள் பள்ளிக்கல்வி மற்றும் உயர் கல்வியை எவ்வித தடையும் இன்றி தொடர்ந்திட ரூ.372 கோடி ரூபாய் கல்வி உதவி தொகைக்காக ஒதுக்கப்படும்.
> 77 கோடி ரூபாய் 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவம் பல் மருத்துவம் பயிலும் மாணவர்களின் கல்வி கட்டணத்திற்காக ஒதுக்கப்படும்.
> கல்வி இடைநீற்றலை தவிர்க்கும் பொருட்டு மாணவிகளுக்கு வழங்கும் ஊக்கத்தொகைக்காக 13.41 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.