தமிழகம்

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் மார்ச் 11 வரை சில இடங்களில் மழை வாய்ப்பு

ச.கார்த்திகேயன்

சென்னை: தமிழகத்தில் நாளை முதல் 11-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தெற்கு உள் கர்நாடகம் முதல் தெலங்கானா வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளையும், நாளை மறுதினமும் லேசான மழை பெய்யக்கூடும்.

இதர தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

          

8-ம் தேதி நீலகிரி, கோவை மாவட்டங்கள் மற்றும் தென்தமிழக கடலோர மாவட்டங்களிலும், 9-ம் தேதி மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தமிழக கடலோர மாவட்டங்களிலும், 10, 11 தேதிகளில் நீலகிரி, கோவை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழக பகுதிகளில வறண்ட வானிலை நிலவக்கூடும்.

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளையும், நாளை மறுதினமும் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரிசெல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT