“சமஸ்கிருதத்தை வளர்ப்பதில் மட்டுமே மத்திய அரசுக்கு அக்கறை” - உதயநிதி ஸ்டாலின்

தமிழை வைத்து மக்களை பாஜக ஏமாற்றுவதாக சாடல்
உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

Updated on
2 min read

தஞ்சாவூர்: “சமஸ்கிருதத்தை வளர்ப்பதில் மட்டுமே மத்திய அரசு அக்கறை காட்டுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் சமஸ்கிருத வளர்ச்சிக்காக மட்டும் மத்திய அரசு ஒதுக்கிய தொகை ரூ.2,500 கோடி. ஆனால் தமிழ் மொழி வளர்ச்சிக்காக மத்திய அரசு ஒதுக்கிய தொகை வெறும் ரூ.147 கோடி” என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

தஞ்சாவூர் கரந்தை தமிழ்ச் சங்கத்தில், இன்று காலை முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி சிலை, தமிழ்ச் சங்க முன்னாள் தலைவர் ச.ராமநாதன் சிலை ஆகியவற்றை திறந்து வைத்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியது: “வரலாற்று சிறப்புமிக்க இந்த இடத்தில் கருணாநிதி சிலை, ராமநாதனின் சிலையை திறந்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இங்கு முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இந்த தமிழ்த் தாய் வாழ்த்தை முதலில் பாடிய இடம் இந்த தமிழ்ச் சங்கம் தான். அதன்பின்னர் 1970-ம் ஆண்டில் மு.கருணாநிதி தமிழ்த் தாய் வாழ்த்தை தமிழக அரசின் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலாக அறிவித்தார்.

ஆனால், இது வெறும் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடல் தான், இதற்கு எழுந்து நின்று நாம் மரியாதை செலுத்த தேவையில்லை என ஒரு கூட்டமும், சிலர் சட்டப் பேரவையில் இந்த பாடலை பாடக் கூடாது என ஒரு கூட்டமும் சொல்கின்றனர்.

1911-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்தச் சங்கம், தற்போது 100 ஆண்டுகளைக் கடந்து தமிழ்ச் சேவையை சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது.​தமிழுக்கு வருகிற ஆபத்துகளை எதிர்ப்பது ஒரு பக்கம், தமிழின் பெருமையைப் பரப்புவது இன்னொரு பக்கம் என இந்தச் சங்கத்தின் பணிகள் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது.

தமிழைச் செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என 1920-ம் ஆண்டில் முதலில் தீர்மானம் நிறைவேற்றியதும், தமிழ் மொழிக்கு தனிப் பல்கலைக் கழகம் தேவை என தீர்மானம் நிறைவேற்றிய இடமும் இதுவே. இதைவிட கூடுதல் சிறப்பு என்னவென்றால், 1937-ம் ஆண்டில் கல்வி நிறுவனங்களில் இந்தி மொழியைத் திணிக்கும்போது அதை எதிர்த்துத் தீர்மானம் நிறைவேற்றியதும் இந்தக் கரந்தை தமிழ்ச் சங்கம்தான்.

இந்தித் திணிப்பை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் நூற்றுக்கணக்கான மகளிரைப் பங்கேற்க வைத்தவர் இந்தப் பகுதியை சேர்ந்த அன்னை தர்மாம்பாள் என்பவர் தான். அப்போது தொடங்கிய இந்தி மொழி திணிப்பு தற்போது வரைக்கும் நடைபெற்று வருகிறது.

அதுமட்டுமில்லாமல், தற்போது புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் தமிழ்நாட்டுக்குள் எப்படியாவது இந்தி மொழியை திணித்து விட வேண்டும் என மத்திய அரசு முயற்சிக்கிறது. தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய கல்வி நிதி ரூ.3,500 கோடியை வழங்காமல் தடுக்கின்றனர்.

மும்மொழி கொள்கையை ஏத்துக்கிட்டால் தான் நிதியை வழங்குவோம் என மத்திய அரசு கூறுகிறது. ஆனால், தமிழக முதல்வர் ரூ.10 ஆயிரம் கோடி கொடுத்தாலும், தமிழகத்தில் இந்தி, சமஸ்கிருத்துக்கு இடம் இல்லை என கூறிவிட்டார்.

அதேபோல் மிசா சட்டம் வந்தபோது, திமுகவுக்கு பொதுக்குழு கூட்டம் நடத்த தமிழகத்தில் யாரும் இடம் தரவில்லை. அப்போது இடம் கொடுத்த ஒரே இடம் கரந்தை தமிழ்ச் சங்கம் தான். இந்த சங்கத்தின் மீது தலைவர் கருணாநிதிக்கு எப்போதும் பற்றும், பாசமும் உண்டு.

தமிழின் தொன்மையை வெளி உலகக்துக்கு எடுத்துரைக்கும் வகையில், வேறு சொல் ஒப்பீட்டு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழறிஞர்களுக்கு விருதுகளும், தேசிய சர்வதேச விருதுகளைப் பெற்ற எழுத்தாளர்களுக்கு வீடுகளும் தமிழக முதல்வர் தொடர்ந்து வழங்கி வருகிறார்.

தமிழில் உள்ள அரிய நூல்கள் பல இன்றைக்கு டிஜிட்டல் வடிவில் மாற்றப்படுகிறது. தமிழில் இருக்கக்கூடிய சிறந்த நூல்கள் இன்றைக்கு உலகத்தில் இருக்கக்கூடிய பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது. அதேபோல் உலகின் சிறந்த நூல்களை எல்லாம், தமிழில் கொண்டுவர முயற்சிகளை தமிழகஅரசு எடுத்து வருகின்றது.

தமிழ் வளர்ச்சிக்கு தமிழக அரசு இன்றைக்கு ஏராளமான பணிகளைச் செய்து கொண்டு வருகிறோம். ஆனால் மத்திய அரசு சமஸ்கிருதத்தை வளர்ப்பதில் மட்டுமே அக்கறை காட்டுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் சமஸ்கிருத வளர்ச்சிக்காக மட்டும் மத்திய அரசு ஒதுக்கிய தொகை ரூ.2,500 கோடி. ஆனால் தமிழ் மொழி வளர்ச்சிக்காக மத்திய அரசு ஒதுக்கிய தொகை வெறும் ரூ.147 கோடி.

​‘தமிழ் தமிழ்’ என்று சொல்லி இன்றைக்கு மக்களை ஏமாற்றுகின்ற வேலையை மத்திய அரசு செய்து வருகிறது. அந்த ஏமாற்று வேலைகளை எல்லாம் நாம் அனைவரும் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும். உண்மையாகத் தமிழுக்காக உழைப்பவர்கள் யார், போலித்தனமாக நடிப்பவர்கள் யார், என்பதை மக்களுக்கு நாம் வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும்” என்று அவர் பேசினார்.

<div class="paragraphs"><p>உதயநிதி ஸ்டாலின் </p></div>
“நாங்குநேரியில் ரத்த ஈரம் காய்வதற்குள் மற்றொரு சம்பவம்!” - அரசு மீது இபிஎஸ் சாடல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in