திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகேயுள்ள மகாதேவப்பட்டினம் ஸ்வேத வராக விஷ்ணுகோயிலில் இருந்து 60 ஆண்டுகளுக்கு முன்பு திருடுபோன ஸ்வேத வராக விஷ்ணு சிலையை கலிபோர்னியாவில் உள்ள மியூசியத்தில் இருந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓய்வுபெற்ற சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் போலீஸில் புகார் அளித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகிலுள்ள மகாதேவப்பட்டினத்தில் அமைந்துள்ள வராகப் பெருமாள் கோயில் (ஸ்வேத வராக விஷ்ணு கோயில்) 400 ஆண்டுபழமையானதாகும். தஞ்சை சர போஜி மன்னர் காலத்தில் கட்டப்பட்டதாக கருதப்படுகிறது. இ
க்கோயிலில் 60 ஆண்டுகளுக்கு முன்னர் திருடுபோன விஷ்ணு சிலை குறித்து மன்னார்குடியில் நேற்று பொன்.மாணிக்கவேல் செய்தியாளர்களிடம் கூறியது: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.யாக நான் பணியாற்றியபோது, மன்னார்குடி அருகேயுள்ள மகாதேவபட்டினம் ஸ்வேத வராக விஷ்ணு கோயிலில் இருந்த 300 ஆண்டுகள் தொன்மையான சுவாமி சிலை அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணம் பாதடினாவில் உள்ள நார்த்தன் சைமன் மியூசியத்தில் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, இந்தக் கோயிலில் 1959-ம் ஆண்டு இந்து சமய அறநிலையத் துறையின் அங்கீகரிக்கப்பட்ட புகைப்பட கலைஞர்கள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படத்துடன், அங்குள்ள சிலையை ஒப்பிட்டு பார்த்தோம். அதில், அந்த மியூசியத்தில் உள்ள சிலை மகாதேவப்பட்டினம் ஸ்வேத வராக விஷ்ணு சிலைதான் என உறுதிப்படுத்தப்பட்டது. குறிப்பாக, அந்த சிலைபஞ்சலோக சிலைதானா என்பதை உறுதிசெய்வதற்காக, இந்த சிலையில் விஷ்ணு கையில் இருக்கும் சக்கரம் வெட்டி எடுக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகே சிலை கடத்தப்பட்டுள்ளது.
60 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்ட இந்தச் சிலை, கோயிலில் இருந்து காணாமல் போனது குறித்து இந்து சமய அறநிலையத் துறை சார்பில் எவ்வித புகாரும் தெரிவிக்கப்படவில்லை. அதனால், இந்தச் சிலை திருட்டு அதிகாரிகளுக்கு தெரிந்தே நடந்துள்ளதா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
மேலும், இந்த சிலையை உடனடியாக இந்தியாவுக்கு கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரவாக்கோட்டை காவல் நிலையத்தில் ஆன்லைன் வாயிலாக புகார் அளித்துள்ளேன். நான் எந்த கட்சிக்கும் ஆதரவாக செயல்படுபவனல்ல. காணாமல்போன நமது தொன்மையான கடவுள்களின் சிலைகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்பதுதான் என் விருப்பம். இவ்வாறு அவர் கூறினார்.