விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சென்னை கொளத்தூர் பகுதியில் வைக்கப்பட்டிருந்த 2,800 கண் திருஷ்டி கணபதி யந்திரங்கள் மற்றும் 2,800 கண் திருஷ்டி சூரிய சக்கரங்களால் ஆன 42 அடி விநாயகர் சிலை. (அடுத்த படம்) 12,000 மகாலட்சுமி சங்கு, 4,000 சிப்பிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட 41 அடி உயரம் 32 அடி அகலம் கொண்ட மகாலட்சுமி சங்கு விநாயகர். (கடைசி படம்) 250 கிலோ அரகஜா கண் மை மூலம் உருவாக்கபட்ட விநாயகர் சிலை. | படங்கள்: ம.பிரபு |
சென்னை: விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, சென்னையில் பொது இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்ட பிரம்மாண்ட விநாயகர் சிலைகள் பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.
முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானின் அவதார தினமான விநாயகர் சதுர்த்தி விழா, நாடு முழுவதும் நேற்று முன்தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. தமிழகத்தைப் பொருத்தவரை சென்னையில் விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாக நடைபெற்றது. பொதுமக்கள் வழிபாட்டுக்காக சென்னையில் 1,500-க்கும் மேற்பட்ட இடங்களில் பிரம்மாண்ட விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டு வழிபாடுகள் நடந்தன.
கொளத்தூர் பூம்புகார் நகரில், 2,900 கண் திருஷ்டி கணபதி எந்திரத் தகடுகள் மற்றும் 2,800 சூரிய சக்கரத் தகடுகளால் உருவாக்கப்பட்ட 42 அடி உயர பிரம்மாண்ட விநாயகர் சிலை நிறுவப்பட்டுள்ளது.
இந்த சிலையைத் தரிசிக்க சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வருகின்றனர்.
அதேபோல், கொளத்தூரின் மற்றொரு பகுதியில் 12 ஆயிரம் வலம்புரி சங்குகள் மற்றும் 2 ஆயிரம் சிப்பிகளால் நேர்த்தியாக உருவாக்கப்பட்ட 40 அடி உயர சிலையும் நிறுவப்பட்டுள்ளது. மங்காரம் தோட்டம் பகுதியில் ரூ.10, ரூ.20, ரூ.50 நோட்டுகளால் ஆன 15 அடி உயர விநாயகர் சிலையும், சி.ஐ.டி நகரில் ரூ.500, ரூ.200, ரூ.100 நோட்டுகள் மற்றும் நாணயங்களால் அலங்கரிக்கப்பட்ட சிலையும் பொதுமக்கள் கவனத்தை ஈர்த்துள்ளன.
மேற்கு மாம்பலம் லட்சுமி நகரில், கருப்பு எள்ளு, வெள்ளை எள்ளு, பருப்பு வகைகள் உள்ளிட்ட 160 கிலோ நவதானியங்களால் 11 அடி உயரத்தில் நவதானிய விநாயகர் உருவாக்கப்பட்டுள்ளது. மணலியில் 3,500 கடல் சிப்பிகளால் 21 அடி உயரச் சிலையும், மணலி புதுநகரில் 15 ஆயிரம் மண் அகல் விளக்குகளால் 30 அடி உயரச் சிலையும் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், திரு.வி.க. நகரில் 300 புடவைகள், 200 வேட்டிகள் மற்றும் 250 துண்டுகளைக் கொண்டு ஆடை வடிவிலான விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
வீடுகளில் வைத்து வழிபட்ட சிறிய சிலைகளை பொதுமக்கள் நீர்நிலைகளிலும் கடலிலும் கரைத்து வருகின்றனர்.
பொது இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள பிரம்மாண்ட விநாயகர் சிலைகள் அனைத்தும் வரும் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் மேளதாளங்கள் முழங்க பிரம்மாண்ட ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, சென்னையில் அனுமதிக்கப்பட்ட 4 கடற்கரைப் பகுதிகளில் கரைக்கப்பட உள்ளன.