சென்னை: “மணல் கொள்ளைக்குக் காரணமான மணல் மாஃபியா குழுக்களுக்கு ஆதரவு கொடுத்து, நிலத்தடி நீர் மீது அக்கறையே இல்லாத திமுக ஆட்சியில் தண்ணீர் இல்லாமல் தமிழ்நாடே திவால் ஆகப்போகிறது,” என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
மேலும், “இத்தேர்தலில் டெல்லி அணி, அந்த அணி, இந்த அணி என எல்லா அணியும் நொறுங்கும்.. தவெக அடித்து நொறுக்கும்” என்று விஜய் நம்பிக்கை தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே நடைபெற்ற தவெக நிர்வாகிகள் மற்றும் பிரசாரக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசினார். அப்போது அவர் , “வேலூர் கூட்டத்தில் தமிழ்நாடுதான் விஜய், விஜய்தான் தமிழ்நாடு என்று நான் கூறினேன். தமிழக மக்களின் உண்மையான பிரதிநிதி நாம் என்பதற்குதான் அப்படி கூறியிருந்தேன்.
அதோடு, விஜய் vs ஸ்டாலின் சார் எனக் கூறியிருந்தேன். தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு டெல்லியை பற்றி ஏன் பேச வேண்டும் என்று கேட்டிருந்தேன். உடனே விஜய், பாஜகவிற்காக பேசுவதாக நான் பேசியதை திரித்துப் பேசுகின்றனர். சிறுபான்மை சகோதரர்களை பயமுறுத்தி ஏமாற்று வேலை செய்தவர்கள், அதை இனிமேல் செய்ய முடியாது என தெரிந்துகொண்டு நான் பேசுவதை திரித்துப் பேசி தில்லுமுல்லு வேலை செய்கின்றனர்.
சென்னையில் ‘டெல்லி, டெல்லி’ எனக் கூவுகிறார்கள், அடிக்கிற கொள்ளைக்கு ரெய்டு வந்தால் டெல்லிக்கு வெள்ளைக் கொடி பிடிக்கிறார்கள். டெல்லி அணி, அந்த அணி, இந்த அணி என எல்லா அணியும் இந்த தேர்தலில் நொறுங்கும்.. தவெக அடித்து நொறுக்கும். கிரிக்கெட்டில் விசில் போடுறது நம்ம சிஎஸ்கே. வரவிருக்கும் தேர்தலில் விசில் போட போவது நம்ம தவெக.
‘ஓம் சக்தி, பராசக்தி ,திமுக ஒரு தீய சக்தி..’ என சின்ன குழந்தைகள் கூட சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.
தமிழகம் தான் தவெக. தவெக தான் தமிழகம். இது தேர்தலுக்கான உறவு இல்லை. இது இயற்கையாக உருவான உறவு. அதை நான் உணர்ந்திருக்கிறேன். எனக்கும் என்னுடைய மக்களுக்கும் நடுவில் யாராலும் நுழைய முடியாது. அம்மா - பையன், அப்பா - பையன், அண்ணன் - தங்கை, அக்கா - தம்பி உறவு இது. இது ஆழமான உறவு என்பதை தமிழக மக்கள் உணர்ந்திருப்பார்கள். மற்றவர்களுக்கு இது தேர்தல், ஆனால் எனக்கும் என்னை நேசிக்கும் மக்களுக்கும் இது ‘எமோஷன்’.
‘தண்ணீர் இல்லாமல் தமிழ்நாடு திவால் ஆகப்போகிறது’ என்று சமீபத்தில் ஒரு கட்டுரை படித்தேன். உண்மையில் மிகவும் வருத்தமாக இருக்கிறது. காரணம், நிலத்தடி நீரை பாதுகாக்காமல் இருப்பதுதான்.
மணல் கொள்ளைக்குக் காரணமான மணல் மாஃபியா குழுக்களுக்கு ஆதரவு கொடுப்பது உங்களுடைய திமுக அரசு. உங்களுடைய ஆட்சியில் தமிழ்நாடே திவால் ஆகப்போகிறது.
விவசாயிகள் உற்பத்தி செய்த நெல் மூட்டைகள் வீணாகிறது. இதற்கு என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?மாறாக, விவசாயிகளை குண்டர் சட்டத்தில் தான் போடத் தெரியும்.
தண்ணிக்குள்ளயே சென்று அணைகளை ஆராய்வது வரைக்கும் எனக்குத் தெரியும்.. அமைதியாக இருப்பதால் எனக்கு எதுவும் தெரியாது என்று நினைக்காதீர்கள். ஒருவர் அமைதியாக இருப்பதால் அவருக்கு ஒன்றும் தெரியாது என்றில்லை.
விஜய்க்கு ஒரு வாய்ப்பு கொடுப்பீர்கள் தானே; விஜய்யை நம்புகிறீர்கள் தானே. ஒவ்வொரு வீட்டிலும் விசில் சத்தம் கேட்கும் தானே. அந்த விசில் சத்தம் ஒவ்வொரு பூத்திலும் புயலாக ஒலிக்கும் தானே.
கடவுளுக்கே படையல் போடும் உயர்ந்த மனிதர்கள் தான் விவசாயிகள். மறுபிறவி, மறுஜென்மம் பற்றி எனக்குத் தெரியாது. அடுத்த ஜென்மம் என இருந்தால் நான் ஒரு விவசாயி குடும்பத்தில் பிறக்க வேண்டும். விவசாயம் பற்றி எனக்கு சரியாகத் தெரியாது. ஆனால் அவர்கள் படும் கஷ்டம் எனக்குத் தெரியும். ஆனால் நானும் டெல்டாகாரன் என காதில் டால்டா ஊற்ற மாட்டேன். டெல்டாகாரன் என சொல்லும் நீங்கள் , விவசாயிகளிடம் துணை நின்றதுண்டா?
உங்களது தந்தைக்கு வெண்கலச் சிலை வைக்க வேண்டும் என ஆசைப்பட்டீர்கள். ஆனால் உச்ச நீதிமன்றம் என்ன சொன்னது; ‘யாருக்கு புகழ் பாட பார்க்கிறீர்கள்’ எனக் கேட்டது. அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? ‘ஊரான் வீட்டு நெய்யில் உங்கள் வீட்டுக்கு ஸ்வீட் செய்யாதீர்கள்’ என்று பொருள். மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண நிதிச்சுமை எனச் சொல்கிறீர்கள், சிலை வைப்பதற்கு பணம் எங்கிருந்து வருகிறது.
கேஸ் சிலிண்டருக்கு மானியமாக 100 ரூபாய் தருவதாக சொன்னீர்களே, என்ன ஆனது!. கரும்புக்கு ஆதார விலையாக 4000 ரூபாய் தருவதாக சொன்னீர்கள், என்ன ஆனது!. நீண்ட நாட்கள் திருமணமே ஆகாமல் இருக்கும் பெண்களுக்கு, அவர்களின் கல்வி தகுதிக்கு ஏற்ப அரசு வேலை தருவதாக சொன்னீர்களே; என்ன ஆனது!
மாநில அரசால் முடியவே முடியாது என தெரிந்திருந்தும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட்டை ஒழிப்போம் என சொன்னீர்கள். இது எவ்வளவு பெரிய மோசடி!. இது பற்றியெல்லாம் கேட்டால் நாம்தான் முன்மாதிரி ஆட்சி எனச் சொல்வார்கள். இது மோசடி ஆட்சி. மோசமானவர்களிலேயே முக்கியமானவர்கள் கேள்விப் பட்டிருக்கிறீர்களா... மோசடி ஆட்சியிலேயே மிகவும் முக்கியமான ஆட்சி திமுக ஆட்சி.
கரூர் சம்பவம் முதல் ‘ஜனநாயகன்’ வரை பழி மீது பழி போட்டார்கள். ஆனால் ‘ஜனநாயகன்’ ரிலீஸ் தொடர்பாக பலர் குரல் கொடுத்தனர். குறிப்பாக பூசி மெழுகி பட்டும் படாமல் குரல் கொடுத்த முதல்வருக்கு நன்றி. மற்ற அனைவருக்கும் நன்றி.
மீனவர்கள் விஷயத்தில் முதல்வர் ஸ்டாலின் அவ்வப்போது கடிதம் எழுதிவிட்டு தூங்கச் சென்றுவிடுவார். அடுத்த முறை முதல்வர் நான் தான் என ஸ்டாலின் சொல்கிறார். இது நடக்க வாய்ப்பே இல்லை. திமுக இரண்டாவது முறை ஆட்சிக்கு வரவே முடியாது. அவரது தந்தையாலே அது முடியவில்லை.
அடுத்த முறை முதல்வர் நான் தான் என ஸ்டாலின் சொல்கிறார். இது நடக்க வாய்ப்பே இல்லை. திமுக இரண்டாவது முறை ஆட்சிக்கு வரவே முடியாது. அவரது தந்தையாலே அது முடியவில்லை” என்று விஜய் பேசினார்.