அசோக வனத்தில் உள்ள அனுமன் கோயிலில் தரிசனம் செய்த குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்.
ராமேசுவரம்: இலங்கையிலுள்ள சீதை அம்மன் கோயிலில் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் சுவாமி தரிசனம் செய்தார். இலங்கைக்கு 2 நாள் அரசுமுறைப் பயணமாக நேற்று முன்தினம் சென்ற அவர், அதிபர் அனுர குமார திசநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களைச் சந்தித்தார்.
மேலும், இந்திய வம்சாவளி தமிழ் சமூகத் தலைவர்களையும், வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களைச் சேர்ந்த தமிழ் தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாடினார். இரண்டாவது நாளான நேற்று, குடியரசு துணைத் தலைவர் நுவரெலியா மாவட்டத்திலுள்ள ராகலா, லிட்டில் ஸ்டேல் எஸ்டேட்டில் இந்திய வீட்டுவசதித் திட்டத்தின்கீழ் கட்டித் தரப்பட்ட வீடுகளை பார்வையிட்டு, பயனாளிகளுடன் கலந்துரையாடினார்.
‘இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் நலனுக்காக இந்திய அரசும், மக்களும் ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் உள்ளனர். இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ் குடும்பங்களுக்கும், தோட்டப் பகுதிகளில் உள்ள இந்திய வம்சாவளி தமிழ் குடும்பங்களுக்கும், இந்திய அரசு இதுவரை 50,000 வீடுகளைகட்டித் தந்துள்ளது.
கூடுதலாக 10,000 வீடுகள் கட்டித்தரப்படும்’ என அப்போது தெரிவித்தார். ராமாயணத்தில் அசோகவனம் என வர்ணிக்கப்பட்ட பகுதி, தற்போது ‘சீதா எலிய’ என்ற இடத்தில் அமைந்துள்ளது.
இங்கு சீதை அம்மனுக்கு கோயில் அமைந்துள்ளது. சி.பி.ராதாகிருஷ்ணன் இந்தக் கோயிலில் வழிபட்டார். பின்னர் அனுமன் கோயிலிலும் வழிபட்டார்.
ராமாயணத்துடன் தொடர்புடைய இந்த புனிதக் கோயில், இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான ஆழமான கலாச்சார மற்றும் நாகரிகத் தொடர்புகளுக்கு ஒரு ஆழ்ந்த நினைவூட்டலாக விளங்குகிறது என அவர் தெரிவித்தார். முன்னதாக, சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு சீதை அம்மன் கோயிலில் வரவேற்பு அளிக்கப்பட்டது.