சென்னை: “தமிழக அரசு கனிம வளங்களை பாதுகாக்க எடுத்துள்ள கொள்கையைப் போலவே, பிற மாநிலங்களின் திட்டங்களுக்காக தமிழகத்தின் விவசாய நிலங்களை கையகப்படுத்தவோ, சேதப்படுத்தவோ கூடாது என்ற, தெளிவான கொள்கை முடிவை உடனடியாக அறிவிக்க வேண்டும்,” என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தின் உரிமையான காவிரி நீரைக் கூட திறக்க மறுக்கும் கர்நாடக அரசுக்கு, தமிழகத்தின் வளமான விவசாய நிலங்களை அழித்து எண்ணெய் குழாய் அமைத்துக் கொடுக்கும் அநீதியைத் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
தமிழகத்தின் உரிமைகளை மதிக்காத மாநிலங்களின் தேவைகளுக்காக, தமிழகத்தின் இயற்கை வளங்களையும், விவசாய வளங்களையும் பலியிடும் போக்கு இனியும் தொடர அனுமதிக்க முடியாது.
தமிழக அரசு, மாநிலத்தின் கனிம வளங்கள் கட்டுப்பாடின்றி பிற மாநிலங்களுக்கு எடுத்துச் செல்லப்படுவதை தடுத்து, தமிழகத்தின் இயற்கை வளங்களை பாதுகாக்கும் நிலைப்பாட்டை எடுத்துள்ளது. அதே கொள்கை, அதே உறுதி, அதே பாதுகாப்பு விவசாய நிலங்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.
பிற மாநிலங்களுக்காக தமிழகத்தின் கனிம வளங்களை சுரண்ட அனுமதிக்க கூடாது என்றால், பிற மாநிலங்களின் தேவைக்காக தமிழகத்தின் விவசாய நிலங்களையும் அழிக்க அனுமதிக்கக் கூடாது. இதுவே சரியானது. கனிம வளங்களை பாதுகாக்க சட்டம் இருந்தால், விவசாய நிலங்களை பாதுகாக்கவும், அதை விட வலுவான பாதுகாப்பு இருக்க வேண்டும்.
பாரத் பெட்ரோலியம் நிறுவனம் கோவை மாவட்டம் இருகூரில் இருந்து கர்நாடக மாநிலம் தேவனகுந்தி வரை எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதில் முத்தூரிலிருந்து கர்நாடக எல்லை வரை நெடுஞ்சாலை ஓரமாக குழாய்கள் பதிக்கப்படுகின்றன.
ஆனால், இருகூரிலிருந்து முத்தூர் வரையிலான சுமார் 70 கிலோமீட்டர் தொலைவுக்கு மட்டும் விவசாயிகளின் எதிர்ப்பை மீறி விளைநிலங்களை தோண்டி குழாய் பதிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாத அநீதியாகும்.
நெடுஞ்சாலை வழியாக கொண்டு செல்ல முடியும் என்றால், விவசாய நிலங்களை ஏன் சிதைக்க வேண்டும்? கர்நாடகாவுக்கு எண்ணெய் கொண்டு செல்ல, தமிழனின் வயல்தான் பாதையா? நாளை எண்ணெய் குழாயில் கசிவு ஏற்பட்டால், அந்த நிறுவனம் இழப்பீடு கொடுக்கலாம். ஆனால் நஞ்சான மண்ணை மீண்டும் உயிர்ப்பிக்க முடியுமா? மாசடைந்த நிலத்தடி நீரை மீட்டெடுக்க முடியுமா? பல தலைமுறைகள் உழைத்து உருவாக்கிய விளைநிலத்தை மீண்டும் உருவாக்க முடியுமா?
கேரளாவுக்காக தமிழகத்தின் கனிம வளங்களை எடுத்துச் செல்லக் கூடாது என்பதே எங்கள் நிலைப்பாடு. அதேபோல், கர்நாடகாவுக்காக தமிழகத்தின் விவசாய நிலங்களையும் அழிக்கக் கூடாது என்பதும் எங்கள் உறுதியான கொள்கை.
எனவே, தமிழக அரசு கனிம வளங்களை பாதுகாக்க எடுத்துள்ள கொள்கையைப் போலவே, பிற மாநிலங்களின் திட்டங்களுக்காக தமிழகத்தின் விவசாய நிலங்களை கையகப்படுத்தவோ, சேதப்படுத்தவோ கூடாது என்ற, தெளிவான கொள்கை முடிவை உடனடியாக அறிவிக்க வேண்டும்.
பாரத் பெட்ரோலியம் நிறுவனம் விவசாய நிலங்கள் வழியாக மேற்கொள்ளும் பணிகளை உடனடியாக நிறுத்தி, ஏற்கனவே பயன்படுத்தப்படும் நெடுஞ்சாலை வழித்தடத்திலேயே முழு திட்டத்தையும் மாற்ற தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.