சென்னை: சென்னை புறநகர் பகுதிகளில் டாஸ்மாக் கடைகளில் அங்கீகரிக்கப்பட்ட யுபிஐ மூலம் பணம் வாங்காமல் தனிநபர் க்யூ.ஆர். கோடு மூலம் பணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.
மதுபானக் கடைகளில் டாஸ்மாக் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட யுபிஐ மிஷின்கள் கட்டாயம் வைத்திருப்பது அவசியம். இதில் ஜிபே, போன்பே போன்ற ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் ஏராளமானோர் மதுவகைகளை வாங்கிச் செல்வர். ஆனால், பல இடங்களில் யுபிஐ மிஷின்களில் சர்வர் பிரச்சினை என்று கூறி ரொக்கமாக பணம் செலுத்தும்படி டாஸ்மாக் ஊழியர்கள் வற்புறுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதற்கிடையே, சில டாஸ்மாக் கடைகளில் புதுவிதமான வசூல்களும் நடைபெற்று வருகின்றன. அதாவது மதுபானக் கடைக்கு உள்ளேயே, ஊழியர்களுக்கு நெருக்கமானவர்கள் அல்லது பார் உரிமையாளர்களுக்கு நெருக்கமானவர்கள் ஏஜென்ட்களாக செயல்படுகின்றனர்.
கையில் பணக்கட்டுடன் அமர்ந்திருக்கும் அவர்களின் செல்போன் எண்ணுக்கு ரூ.220-க்கு ஜிபே செய்தால், அவர் 20 ரூபாயை கமிஷனாக எடுத்துக் கொண்டு 200 ரூபாயை வாடிக்கையாளரிடம் கொடுக்கிறார். 1000 ரூபாய் என்றால் ரூ.100 வரை கமிஷனாகப் பெறுகிறார்.
கமிஷன் போக மீதி பணத்தை வாடிக்கையாளர்கள் பணமாகக் கொடுத்து மதுபானம் வாங்குகின்றனர். அதில் அதிக பட்ச விலையை விட அதிகமாக ரூ.10, மற்றும் பாட்டிலைத் திரும்பப் பெறும் திட்டத்தில் ரூ.10 என கூடுதல் விலை கொடுக்க வேண்டியுள்ளது. குளிர்ந்த பீருக்கு ரூ.210 வரை வாங்குகின்றனர். அந்த வகையில் மதுபானத்துக்கான அதிகபட்ச விலையை விட குறைந்தபட்சம் ரூ.50 வரை கூடுதலாக செலவிடும் சூழல் ஏற்படுகிறது.
இதுபோன்ற ஏஜென்ட்களின் அடாவடி வசூல் இரவு 8 மணி முதல் 10 மணி வரை நடக்கிறது. அதிலும் குறிப்பாக கடைசி அரை மணி நேரம் அதாவது 9.30 மணியில் இருந்து 10 மணி வரையிலான இடைப்பட்ட நேரத்தில் கூடுதலாக நடக்கிறது.
இதனால் மதுப்பிரியர்கள் கடும் மன உளைச்சலில் உள்ளனர். இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஏஜென்ட்களின் மூலம் நடைபெறும் கொள்ளையை தடுக்க வேண்டும் எனவும் வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.