தஞ்சாவூரில் நேற்று கைவினைக் கலைஞர்களை சந்தித்து, கலைப் பொருட்களை பார்வையிட்ட மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால்.
தஞ்சாவூர்: சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவை மக்கள் அகற்றுவார்கள் என மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தெரிவித்தார்.
தஞ்சாவூரில் நேற்று கைவினைக் கலைஞர்களை சந்தித்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் தேர்தல் அறிக்கையை உருவாக்கும் பணிக்காக, பல்வேறு இடங்களுக்குச் சென்று வருகிறோம்.
அதன்படி, கைவினைக் கலைஞர்களை சந்தித்து, அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்து, பாஜக தேர்தல் அறிக்கையில் சேர்க்க உள்ளோம். தேர்தல் முடிந்து, தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வரும்போது, கைவினைக் கலைஞர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படும்.
திமுக அரசு மக்களை பற்றி கவலைப்படவில்லை. அவர்களின் குறிக்கோள், அவர்களது குடும்பத்தை மட்டும் ஊக்குவிப்பதாக உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி மக்களையும், தமிழகத்தின் வளர்ச்சியையும் மேம்படுத்துவதை குறிக்கோளாகக் கொண்டுள்ளது.
தமிழக மக்களுக்கு நல்லாட்சியை வழங்குவோம். தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. மேலும், பாலியல் வழக்குகள், கொலை, போதைப் பொருட்கள், அதிகார துஷ்பிரயோகம் போன்ற தீமைகளால், மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
எனவே, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் திமுகவை அகற்றுவார்கள். தேசிய ஜனநாய கூட்டணி அரசு அமைக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.