சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தலைவராக ஜேசிடி.பிரபாகர் போட்டியின்றி நேற்று தேர்வானார். அவரை வாழ்த்தி சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பேசியதாவது: வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த பேரவையின் தலைவர் மற்றும் துணைத்தலைவராக தேர்வான இருவருக்கும் எனது வாழ்த்துகள்.
பேரவைத்தலைவர் 3 முறை எம்எல்ஏவாக இருந்துள்ளதால் தங்களுக்கு அவையின் மரபுகளும், விதிகளும் புதியது கிடையாது. எதிர்க்கட்சிகளையும் அரவணைத்து, நீங்கள் நடுநிலையோடு செயல்படுவீர்கள் என்பதே எங்கள் எதிர்பார்ப்பாகும். இந்த அவையில் எதிரி கட்சியாக இல்லாமல் ஒரு ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக திமுக நிச்சயம் செயல்படும்.
வாக்களித்த மக்களுக்கு மட்டுமின்றி, வாக்களிக்காத மக்களுக்குமான அரசாகவும் செயல்பட வேண்டும். முதல்வர் விஜய்யும், நானும் ஒரே கல்லூரியில் படித்த பழைய மாணவர்கள். ஒரே கல்லூரியில் நாம் படித்தாலும் அரசை நடத்துவதில் திமுகதான் சீனியர் பேட்ச். 1967-லேயே ஆட்சிக்கு வந்தது திமுக.
ஆகவே, நாங்கள்தான் சீனியர்ஸ். அந்த அடிப்படையில் எங்களின் அறிவையும், அனுபவத்தையும் நாங்கள் பகிர்ந்துகொள்ளத் தயாராக இருக்கிறோம். அதை ஏற்க நீங்களும் தயாராக இருங்கள். ஏனெனில் நமக்கு எப்போதுமே மாநிலத்தின் நலன்தான் முக்கியம்.
இம்முறை கிட்டத்தட்ட ஆளுங்கட்சிக்கு இணையான எதிர்க்கட்சி வரிசையும் வலிமையாக அமைந்துள்ளது. இதன்மூலம் இந்த புதிய அரசை வழிநடத்த வேண்டும் என மக்கள் நமக்குச் சொல்லியிருக்கிறார்கள். அதற்கேற்ப எங்கள் பணிகள் நிச்சயம் இருக்கும்.
புதிய அரசு பதவியேற்பு நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து 3-வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. இது தமிழக மக்கள் மத்தியில் பெரும் கோபத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அதற்கு ஆளுங்கட்சியும் ஒரு விளக்கத்தை கொடுத்துள்ளது.
பாஜக ஆட்சிக்கு வந்துள்ள மேற்குவங்க மாநிலத்தில் பதவி ஏற்பு நிகழ்ச்சியின்போது வந்தே மாதரம் பாடல் பாடப்படவில்லை. ஆனால் இங்கே தமிழகத்தில் அது பாடப்பட்டுள்ளது. மேற்குவங்கத்தில் ஆளுநராக ஆர்.என்.ரவி இருக்கிறார்.
அவர் இங்கே ஆளுநராக இருந்தபோது தமிழக சட்டப்பேரவையில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்பு தேசிய கீதம் பாட வேண்டுமென மரபையே மாற்றச் சொன்னார். அதை நாங்கள் உறுதியாக மறுத்ததால், 2023-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 3 ஆண்டுகள் அவர் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.
பேரவையில் மட்டுமல்ல, தமிழகத்தில் நடைபெறக்கூடிய எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, தமிழ்த்தாய் வாழ்த்து என்றைக்கும் இரண்டாவது இடத்துக்கு தள்ளிப்போக விடக்கூடாது. இந்த அரசு அதற்கு அனுமதிக்கக்கூடாது. மிகவும் விழிப்போடு இருந்து நமது உரிமையை, மரபைப் பாதுகாக்க வேண்டும்.
தேர்தலில் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை ஆளுங்கட்சிக்கு மக்கள் வழங்காமல் போனாலும், திமுக தலைமையில் தேர்தலைச் சந்தித்து வென்ற தோழமை கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்துள்ள புதிய அரசுக்கு மீண்டும் எனது வாழ்த்துகள். மேலும், மக்களைப் பிரிக்கும் சனாதனம் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.