உதயநிதி

 
தமிழகம்

“எம்எல்ஏக்களை வாங்குவதை விடுத்து கர்நாடகாவிடம் நமக்கான நீரை வாங்க கவனம் செலுத்தவும்” - உதயநிதி

தமிழினி

சென்னை: “எம்எல்ஏக்களை வாங்குவதில் மட்டும் கவனம் செலுத்தாமல், கர்நாடகாவிடம் இருந்து நமக்கு வர வேண்டிய தண்ணீரை வாங்குவதில் தவெக அரசு கவனம் செலுத்த வேண்டும்” என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “கர்நாடகத்தில் இருந்து காவிரி நீரை திறந்துவிட முடியாது’ என்றும், நீர் வேண்டும் என தமிழ்நாடு அரசு தரப்பில் யாரும் கேட்கவில்லை” என்றும் அம்மாநில நீர்ப்பாசன அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறியிருப்பது, நம் விவசாயிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஏற்கெனவே பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் விவசாயிகளை ஏமாற்றிய முதல்வர், கர்நாடக அமைச்சரின் இந்தப் பேச்சுக்கு என்ன பதில் வைத்திருக்கிறார்?

முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்காலத்தில், கடந்த 5 ஆண்டுகள் முழுவதும், சரியாக ஜுன் 12 அன்று மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு இன்று வரை மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை.

மேகேதாட்டு அணைக் கட்டும் கர்நாடகத்தின் முயற்சிக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது, அந்த தீர்மானத்தைத் தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளும் ஒன்றாகச் சென்று ஒன்றிய அரசிடம் வழங்க வேண்டும் என்று கூறியிருந்தேன்.

காவிரி மேலாண்மை வாரியத்தின் தீர்ப்பின்படி, ஜுன் மாதம் வழங்க வேண்டிய 9.91 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் திறக்காதது குறித்தும் பேசி இருந்தேன்.

இதற்கெல்லாம் முதல்வர் பதில் ஏதும் சொல்லாத நிலையில், தற்போது ஜூலை மாதம் தர வேண்டிய 32 டிஎம்சி தண்ணீரையும் கர்நாடகம் தர மறுக்கிறது. ஆளுங்கட்சியுடன் திடீர் கூட்டணி அமைத்திருக்கும் கட்சியின் ஆட்சி நடைபெறும் கர்நாடகத்திடம் இருந்து, தமிழ்நாட்டுக்குச் சேர வேண்டிய தண்ணீரை முதல்வர் கேட்டுப்பெற வேண்டும்.

எம்எல்ஏக்களை வாங்குவதில் மட்டும் கவனம் செலுத்தாமல், கர்நாடகாவிடம் இருந்து நமக்கு வர வேண்டிய தண்ணீரை வாங்குவதில் கவனம் செலுத்த வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT