தமிழகம்

“நிதிஷ்குமாருக்கு ஏற்பட்ட நிலை நாளை பழனிசாமிக்கும் ஏற்படும்” - உதயநிதி பேச்சு

செய்திப்பிரிவு

பாஜக-வால் நிதிஷ்குமாருக்கு இன்று ஏற்பட்டுள்ள நிலை நாளை பழனிசாமிக்கும் ஏற்படும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

தருமபுரி கிழக்கு, மேற்கு மாவட்டங்களின் திமுக துணை அமைப்புகளின் நிர்வாகிகள், துணை அமைப்பாளர்கள் சந்திப்புக் கூட்டம் தருமபுரியில் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த மத்திய அரசு அழுத்தம் கொடுப்பதுடன், தமிழகத்துக்கான கல்வி நிதி உள்ளிட்ட நிதிகளை நிறுத்தி வைத்துள்ளது. இந்த அழுத்தங்களுக்காக சமரசம் அடைந்து விடாமல், தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடரும் என்பதில் முதல்வர் உறுதியாக இருக்கிறார்.

          

பிஹாரில் 10 முறை முதல்வராக இருந்த நிதிஷ்குமார் தற்போது மாநிலங்களவை உறுப்பினர் ஆக்கப்பட்டுள்ளார். பிஹார் மாநில ஆட்சியை பாஜக தன் வசமாக்கியுள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலின் போது பாஜக-வுடன் கூட்டணியில் இருந்து அவர்களின் வெற்றிக்காக உழைத்த நிதிஷ்குமாருக்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இன்று அவருக்கு ஏற்பட்டுள்ள நிலை நாளை பழனிசாமிக்கும் ஏற்படும். தேர்தலுக்கு பிறகு அதிமுக-வை பாஜக கபளீகரம் செய்து விடும்.

தமிழக அரசின் திட்டங்கள், பயன்கள், சாதனைகள் குறித்து திமுக-வின் அனைத்து நிலை நிர்வாகிகளும் வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்யுங்கள். பிரச்சாரம், பொதுவெளியில் பேசும்போது மிகுந்த கண்ணியத்துடன் பேச வேண்டும். திமுக-வின் நீண்ட, நெடிய வரலாறு, ஆட்சியின் சாதனை ஆகியவற்றை தரவுகளுடன் தெரிவித்து மாவட்டத்தின் 5 தொகுதிகளிலும் வெற்றிபெற களப் பணியாற்றுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT