உதயநிதி ஸ்டாலின்

 
தமிழகம்

“தமிழகத்தில் அதிமுக அடிமை ஆட்சி அமையவிடக் கூடாது” - அரூரில் உதயநிதி பிரச்சாரம்

எஸ். செந்தில்

அரூர்: “தமிழகத்தில் அதிமுக அடிமை ஆட்சியை அமைய விடக்கூடாது. பிரதமர் மோடி அமித் ஷா ஆகியோர் தமிழ்நாட்டுக்கு வருகின்றனர். தமிழ்நாட்டுக்கு எதுவும் செய்யாத பாஜகவை தமிழகத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும். ” என தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தருமபுரியில் இன்று தேர்தல் பரப்புரையில் திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஈடுபட்டு வருகிறார். முதலாவதாக அரூர் (தனி) தொகுதி திமுக வேட்பாளரான அ.சண்முகத்தை ஆதரித்து தமிழக துணை முதல்வரும்,திமுக இளைஞரணி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், “திமுக மீண்டும் ஆட்சி அமைத்த உடன் இல்லத்தரசி திட்டம் செயல்படுத்தப்பட்டு, ஒவ்வொரு வீட்டிற்கும் ரூ.8,000 மதிப்புள்ள ஒரு கூப்பன் வழங்கப்பட்டும். அதில் வீட்டுக்கு தேவையான எலக்ட்ரானிக் சாதனங்களை வாங்கிக் கொள்ளலாம்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி இந்தியாவில் நம்பர் ஒன் மாநிலமாக தமிழகம் இருந்து வருகிறது. ஒன்றிய அரசு நாம் கேட்கின்ற நிதியை கொடுக்கவில்லை, மக்களுக்கு என்னென்ன தேவை என்பதை பார்த்து பார்த்து தமிழக முதல்வர் ஸ்டாலின் செய்துள்ளார். இனியும் இது தொடர வேண்டும்.

          

மீண்டும் அதிமுக அடிமை ஆட்சியை தமிழகத்தில் அமைய விடக்கூடாது, பிரதமர் மோடி அமித் ஷா ஆகியோர் தமிழ்நாட்டுக்கு வருகின்றனர், தமிழ்நாட்டுக்கு எதுவும் செய்யாத பாஜகவை தமிழகத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும், அதிமுகவுக்கு போடப்படும் வாக்கு பாஜகவுக்கு போடும் வாக்கு. இது தமிழ்நாட்டுக்கும் டெல்லிக்கும் நடக்கக்கூடிய தேர்தல், மோடியா தமிழ்நாடா என பார்க்கக்கூடிய தேர்தல். ஒவ்வொரு முறையும் டெல்லியை ஓட ஓட விரட்டிக் கொண்டு இருக்கிறோம், மோடி அமித் ஷாவைக் கூட ஓட ஓட விரட்டி இருக்கிறோம்.

இந்த தேர்தலிலும் மோடியையும் அமித் ஷாவையும் விரட்ட வேண்டும், ஜாடிக்கேற்ற மூடி என்ற பழமொழி உள்ளது. அதே போல தான் மோடிக்கு ஏத்த எடப்பாடி இருக்கிறார், முரட்டு பக்தர் போல இருக்கும் முரட்டு அடிமையை விரட்டி அடிக்க வேண்டும் . பத்து தோல்வி பழனிசாமியை மொத்த தோல்வி பழனிசாமியாக்கி விரட்ட வேண்டும்,” என்றார்.

இதனைத் தொடர்ந்து திமுக வேட்பாளர் சண்முகத்திற்கு உதய சூரியன் சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

SCROLL FOR NEXT