கோவை கணியூர் சுங்கச்சாவடி அருகே இன்று மாலை நடந்த திமுக மேற்கு மண்டல இளைஞரணி நிர்வாகிககள் மாநாட்டில் பேசிய இளைஞரணி செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின். அருகில், நிர்வாகிகள் உள்ளிட்டோர் உள்ளனர். 

 
தமிழகம்

“அதிமுகவை பாஜகவுக்கு விற்று விட்டார் பழனிசாமி” - கோவையில் உதயநிதி பேச்சு

சல்மான்

கோவை: “பழனிசாமி 2019-ல் அதிமுகவை பாஜகவுக்கு அடகு வைத்தார். 2021-ல் அதிமுகவை பாஜகவுக்கு லீசுக்கு விட்டார். 2026-ல் அதிமுகவை பாஜகவுக்கு விற்று விட்டார் என கோவை மேற்கு மண்டல மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

திமுக மேற்கு மண்டல இளைஞரணி மாநாடு, கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியை அடுத்த கணியூர் சுங்கச்சாவடி அருகே இன்று (பிப்.22) மாலை நடைபெற்றது.

          

இம்மாநாட்டுக்கு திமுக இளைஞரணி செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை வகித்து பேசியதாவது: “இம்மாநாட்டில் 16 கழக மாவட்டங்கள், 39 தொகுதிகளைச் சேர்ந்த 80 ஆயிரம் இளைஞரணி நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். உங்கள் எழுச்சியை பார்க்கும் போது, ‘வெஸ்ட்டில் திமுக பெஸ்ட்’ என இக்கூட்டம் நிரூபித்துக் காட்டும். முதல்வரின் ஆட்சி, அரசியல் நாட்டுக்கே வழிகாட்டுகிறது. நாட்டில் பாஜகவுக்கு எதிரான போரில், நம் தலைவரை தலைமை ஏற்க மற்ற மாநில தலைவர்கள் வலியுறுத்துகின்றனர். ஆட்சியை பொறுத்தவரை ஏராளமான திட்டங்களை தந்துள்ளார்.

குறிப்பாக, 1.31 கோடி மகளிருக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1000 வழங்கப்படுகிறது. இந்த மாதம் முதல்வர் மகளிர் உரிமைத் தொகையாக, கோடைக்கால சிறப்புத் தொகை சேர்த்து ரூ.5 ஆயிரம் வழங்கி மகளிருக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். அடிமைகளுக்கு மிகப்பெரிய ஷாக் கொடுத்துள்ளார். பிரதமர் மோடி அடிக்கடி டிவியில் தோன்றுவார்.

ஒருமுறை கரோனா காரணம் காட்டி ஊரடங்கு பிறப்பித்தார். 2016-ல் ரூ.500, ரூ.1000 பணத்தாள்களை மதிப்பிழந்ததாக அறிவித்தார். பிரதமர் மோடி எப்பொழுது டிவியில் தோன்றினாலும், மக்கள் பயத்துக்குச் சென்று விடுவர். முதல்வர் ஸ்டாலின் டிவியில் தோன்றினால் மக்கள் மகிழ்ச்சியாக பார்க்கின்றர். பல்வேறு திட்டங்களை முதல்வர் செயல்படுத்துவதால், தமிழகம் 11.19 சதவீதம் வளர்ச்சி பெற்று நாட்டிலேயே தலைசிறந்த மாநிலமாக உள்ளது.

புதிய கல்விக் கொள்கையை கொண்டு வந்து, தமிழகத்தில் இந்தி - சமஸ்கிருதத்தை நுழைக்கப் பார்க்கின்றனர். தேர்தல் வருவதால், பிரதமர் மோடி, அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தமிழகத்துக்கு அடிக்கடி வரத் தொடங்கியுள்ளனர். அவர்கள் வருவார்கள். ஆனால், எந்த நிதியும் வராது, எந்த திட்டமும் வராது. பிரதமர் மோடிக்கு முரட்டு அடிமையாக பழனிசாமி மாறியுள்ளார். எம்.ஜி.ஆர் இன்றைக்கு உயிரோடு இருந்தால், என் கட்சியை இப்படி ஆக்கிவிட்டாயே என பழனிசாமியை நினைத்து அழுதிருப்பார்.

பழனிசாமி 2019-ல் அதிமுகவை பாஜகவுக்கு அடகு வைத்தார். 2021-ல் அதிமுகவை பாஜகவுக்கு லீசுக்கு விட்டார். 2026-ல் அதிமுகவை பாஜகவுக்கு விற்று விட்டார். தன் சுயநலத்தால் பழனிசாமி, அதிமுகவை அழிவுப் பாதைக்கு கொண்டு செல்கிறார். ஆனால், முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாட்டை அறிவுப் பாதைக்கு அழைத்துச் செல்கிறார். நாங்கள் ஈ.டிக்கும் பயப்பட மாட்டோம், மோடிக்கும் பயன்பட மாட்டோம். ஏன், மோடியின் டாடிக்கும் பயப்பட மாட்டோம்.

ஜாடிக்கு ஏற்ற மூடி போல், மோடிக்கு ஏற்ற அடிமையாக பழனிசாமி உள்ளார். மக்களை தொந்தரவு செய்து, வெறுப்பை பரப்புவது பாஜகவின் நோக்கம். ஒவ்வொரு மாநிலத்திலும் வெறுப்பு அரசியலை பரப்புகின்றனர். முதல்வர் இருக்கும் வரை பாஜகவின் கலவர அரசியலை தமிழ்நாட்டுக்குள் நுழைய மக்கள் விடமாட்டார்கள். தற்போது நடக்க உள்ளது 8 கோடி மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் போராகும்.

தமிழகத்தை சீரழிக்க பாசிச, அடிமைகள் எல்லாம் ஒன்று சேர்ந்து வருகின்றனர். அதை தடுக்கும் பொறுப்பு இளைஞரணிக்கு உள்ளது. இளைஞரணியினர் ஒவ்வொரு வீடு வீடாகச் சென்று கழக கொள்கைகள், அரசின் திட்டங்களை எடுத்துக் கூறுங்கள். இந்த தேர்தல் தமிழ்நாட்டுக்கும், டெல்லிக்கும் இடையே நடக்கும் ஜனநாயகப் போர். இந்த போரில், தமிழ்நாடு நிச்சயம் வென்று காட்டும்.

சிலர் நம் இயக்கத்தை அழித்துவிடலாம் என பகல் கனவு காண்கின்றனர். நம்மை யாராலும் அழிக்க முடியாது. வெல்வோம் 200, படைப்போம் வரலாறு என தலைவர் டார்க்கெட் கொடுத்துள்ளார். அடுத்த 50 நாட்களுக்கு இளைஞரணியின் களத்தில் இறங்கி பிரச்சாரம் செய்தால், 200-க்கும் அதிகமான தொகுதிகளில் திமுக, மதச்சார்ப்பற்ற கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும்” இவ்வாறு உதயநிதி பேசினார்.

முன்னதாக, மண்டல பொறுப்பாளர் செந்தில் பாலாஜி வரவேற்றார். அமைச்சர் மு.பெ.சாமிநாதன், அந்தியூர் செல்வராஜ் எம்.பி ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். பிரகாஷ் எம்.பி நன்றி கூறினார்.

SCROLL FOR NEXT