நாகையில் நேற்று நாகூர் ஹனிபா நூற்றாண்டு விழா மலரை வெளியிட்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். உடன், அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்டோர்.
நாகப்பட்டினம்: திராவிட இயக்கம் இருக்கும் வரை நாகூர் ஹனிபாவின் குரல் ஒலிக்கும் என்று அவரது நூற்றாண்டு விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டார்.
பிரபல பாடகரும், திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவருமான இசைமுரசு நாகூர் ஹனிபா நூற்றாண்டு விழா தமிழக அரசு சார்பில் நாகையில் நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு, விழா மலரை வெளியிட்டார்.
தொடர்ந்து, நாகூர் ஹனிபாவின் வாரிசுகள் நவ்ஷாத் அலி, நாஸர் அலி, நஸீமா பேகம், மும்தாஜ் பேகம் குடும்பத்தினர், ஜரீனா பேகம் குடும்பத்தினர் கவுரவிக்கப்பட்டனர். முன்னதாக, சில்லடி கடற்கரையில் நாகூர் ஹனிபா பெயரில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவையும் உதயநிதி திறந்து வைத்தார். விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: சென்னையில் வரும் 24-ம் தேதி நடைபெறும் இசைமுரசு நாகூர் ஹனிபா புத்தக வெளியீட்டு விழாவில் தமிழக முதல்வர் பங்கேற்கிறார். மறைந்த திமுக தலைவர் கருணாநிதி, நாகூர் ஹனிபா ஆகியோரது குரல்கள்தான் 75 ஆண்டுகளாக திமுக மேடையில் உச்சரிக்கப்பட்டு வருகின்றன.
வக்பு வாரியத் தலைவராக இருந்து இஸ்லாமிய மக்களுக்கு சேவை செய்தவர் நாகூர் ஹனிபா. அவரது காலடிச் சுவடுகள் இந்த மண்ணில் இருக்கும்வரை, அவரது குரல் காற்றில் கலந்துள்ள வரை, தமிழகத்தில் இந்தி திணிப்பை பாஜக அரசு செய்யமுடியாது. இந்த மண்ணில் திராவிட இயக்கம், இஸ்லாமிய நெறி உள்ள வரைக்கும் நாகூர் ஹனிபாவின் குரல் ஒலிக்கும்.
இஸ்லாமிய மக்களுக்காக ஏராளமான திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தியுள்ளது. எனவே, திராவிட மாடல் அரசுக்கு இஸ்லாமியர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். விழாவில், அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நாகை எம்.பி. வை.செல்வராஜ், எம்எல்ஏ-க்கள் முகமது ஷாநவாஸ், நாகைமாலி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறைச் செயலாளர் ராஜாராமன், மாவட்ட ஆட்சியர் ஆகாஷ், மீன் வளர்ச்சி கழகத் தலைவர் கவுதமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.