தமிழகத்தைப் புறக்கணிக்கும் பாஜகவுக்கு தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
திமுக கூட்டணியில் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எல்.சுந்தர்ராஜை ஆதரித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் எல்லையம்மன் கோயில் பகுதியில் நேற்று பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது: கம்யூனிஸ்ட் கட்சிக்கும் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு, பெரியாரை சந்திக்கவில்லை என்றால் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்திருப்பேன் என அவரே கூறியுள்ளார். தோழர் சுந்தர்ராஜ் ஒரு தொழிலாளியாக வாழ்கையை தொடங்கியவர். இந்த தொகுதியில் உள்ள தொழிலாளர்களின் பிரச்சனைகளை அறிந்தவர்.
தேர்தல் நேரத்தில் மட்டும் அவர் உங்களை சந்திப்பவர் அல்ல எப்போதும் மக்களோடு மக்களாக இருப்பவர். இந்த தொகுதிக்கு திமுக அரசு பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. குறிப்பாக எண்ணூர், நெட்டக்குப்பம், கொசஸ்தலை ஆறு பகுதியில் தூண்டில் வளைவு, விம்கோ நகர், அண்ணாமலை நகரில் ரயில்வே சுரங்கபாதை, கத்திவாக்கத்தில் நவீன மீன் அங்காடி என பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். நம் வேட்பாளரை வெற்றி பெற வைத்தால் மேலும் பல திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
இதேபோல பல திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்து தரப்பு மக்களுக்கும் செயல்படுத்தியுள்ளார். மேலும் பல புதிய திட்டங்களை செயல்படுத்த உள்ளார். இந்த தேர்தல் தமிழக அணி மற்றும் டெல்லி அணி இடையேயான தேர்தல். மத்திய பாஜக அரசு கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்துக்கு ஏதாவது செய்துள்ளதா, பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற பெயர் கூட இடம்பெறவில்லை. தமிழகத்தை மத்திய பாஜக அரசு புறக்கணிக்கிறது.
அதற்காக இந்தத் தேர்தலில் பாஜகவுக்கு பாடம் புகட்ட வேண்டும். மறைமுகமாக முகமூடி அணிந்து பாஜக வருகிறது. பாஜகவை விரட்டி அடிக்க வேண்டிய நேரம் இது. அடிமை கூட்டம், சங்கி கூட்டத்தை நாம் நுழைய விடக்கூடாது. திமுக வெற்றி பெற்று திராவிட மாடல் 2.0 அரசு தொடர வேண்டும்.