ஈரான் அருகே உள்ள ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து குஜராத் மாநிலம் வடினார் வந்து சேர்ந்த இந்திய டேங்கர் கப்பல் நந்தா தேவி. படம்: பிடிஐ
அகமதாபாத்: சுமார் 46,000 மெட்ரிக் டன் எல்பிஜி காஸ் நிரப்பிய இந்திய டேங்கர் கப்பல் நந்தா தேவி நேற்று குஜராத் வந்தடைந்தது. அதில் உள்ள எல்பிஜி காஸ் 2 தனி கப்பல்களுக்கு மாற்றப்பட்டு தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.
கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தொடங்கிய கூட்டுத் தாக்குதல் போராக மாறியது. இதில் உலக நாடுகளுக்கு சரக்குக் கப்பல் செல்லக் கூடிய ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியது. மீறிச் செல்லும் கப்பல்கள் தாக்கப்படும் சூழல் உள்ளது.
இந்த சூழலில் மத்திய அரசு மேற்கொண்ட முயற்சியால் இந்தியக் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து செல்ல ஈரான் சிறப்பு அனுமதி கொடுத்தது.
இதையடுத்து 40,000 மெட்ரிக் டன் எல்பிஜி காஸ் நிரப்பிய ஷிவாலிக் என்ற டேங்கர் கப்பல் ஹார்முஸ் ஜலசந்தியை பத்திரமாக கடந்து நேற்று முன்தினம் குஜராத்தின் முந்த்ரா துறைமுகம் வந்து சேர்ந்தது.
இந்நிலையில் சுமார் 46,000 மெட்ரிக் டன் எல்பிஜி காஸ் நிரப்பிய நந்தா தேவி என்ற மற்றொரு டேங்கர் கப்பல் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து நேற்று அதிகாலையில் குஜராத் வந்து சேர்ந்தது. நந்தா தேவி டேங்கர் கப்பல் குஜராத்தின் கண்ட்லா துறைமுகத்தில் நிறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு பதிலாக இக்கப்பல் வடினார் அருகில் நடுக்கடலில் நிறுத்தப்பட்டது.
அதில் உள்ள எல்பிஜி காஸ், எம்டி பிடபிள்யூ பிரீஸ் மற்றும் எம்டி ஜக் பிரதாப் ஆகிய 2 தனி கப்பல்களுக்கு மாற்றப்படும். அதன் பிறகு இரு கப்பல்களும் தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படும் என அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.
நாடு முழுவதும் சமையல் காஸ் தட்டுப்பாடு நிலவும் சூழலில் 2 நாட்களில் 2 எல்பிஜி கப்பல்கள் இந்தியா வந்திருப்பது மிகப்பெரிய நிவாரணமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வளைகுடாவில், மொத்தம் 611 மாலுமிகளுடன் இந்தியக் கொடியேற்றப்பட்ட 22 கப்பல்கள் உள்ளன. ஐக்கிய அரபு அமீர
கத்தில் இருந்து சுமார் 81,000 டன் கச்சா எண்ணெயுடன் இந்தியக் கொடியேற்றப்பட்ட ‘ஜக் லட்கி' எண்ணெய்க் கப்பலும் பாதுகாப்பாக இந்தியாவை நோக்கிப் பயணித்து வருவதாக அதிகாரி ஒருவர் கூறினார்.