விசிக தலைவர் திருமாவளவன்
சென்னை: விசிகவின் ஆதரவை விஜய் கோரியுள்ள நிலையில் இடதுசாரிகளின் முடிவை அறிந்து நாங்கள் முடிவெடுப்போம் என திருமாவளவன் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி தவெக 108 இடங்களில் வென்றுள்ளது. ஆட்சியமைக்க தேவையான 118 இடங்கள் கிடைக்காததால் விஜய் ஆட்சியமைக்க மற்ற கட்சிகளின் ஆதரவைக் கோரி வருகிறார்.
இந்நிலையில் நேற்று காங்கிரஸ் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. மேலும் விசிக மற்றும் இடதுசாரி கட்சிகள் தலா 2 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும் நிலையில் அவர்களின் ஆதரவையும் விஜய் கோரியுள்ளார்.
திமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள், தற்போது கூட்டணியிலிருந்து பிரிந்து தவெகவுக்கு ஆதரவு அளிப்பார்களா என்ற கேள்வி எழுத்துள்ளது.
இதுகுறித்து விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தவெக தலைவர் விஜய் ஆதரவு கேட்டு கடிதம் அனுப்பியிருக்கிறார். இடதுசாரி கட்சிகளுக்கும் அவர் கடிதம் எழுதியிருக்கிறார். இது தொடர்பாக கட்சியின் முன்னணி பொறுப்பாளர்களோடு கலந்தாய்வு செய்த பின்னர்தான் முடிவெடுக்க முடியும். விஜய் மீது மக்கள் நம்பிக்கை வைத்து வாக்களித்திருக்கிறார்கள். அந்த நம்பிக்கைக்குப் பாத்திரமாக அவர் நல்லாட்சியைத் தருவார் என்று நம்புகிறேன். திமுக உடனான கூட்டணியைப் பொறுத்தவரை, நாங்கள் கூட்டணியுடன் நீண்ட காலமாக பயணித்து வந்திருக்கிறோம். இப்போதும் அந்த நட்பு நீடிக்கிறது.
ஆட்சியில் பங்கு.. பாஜக ஒரே ஓர் இடத்தில்தான் வெற்றி பெற்று இருக்கிறது. இப்படி இருக்கையில் தவெக ஆட்சியமைப்பதில் எப்படி தலையீடு செய்ய முடியும் என்று தெரியவில்லை, காங்கிரஸின் நிலைப்பாடு குறித்து நான் கருத்து சொல்ல விரும்பவில்லை.
ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்பது எங்கள் கோரிக்கை, நிலைப்பாடு. இந்த சூழலை உருவாக்கிய தமிழக மக்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம். ஆனால் அமைச்சரவையில் இடம் என்ற ஒற்றை காரணத்துக்காக மட்டும் முடிவை எடுக்க முடியாது. இதில் எங்களுக்கு உள்ள நிறை, குறை, கட்சியின் எதிர்காலம் என அனைத்தையும் சீர்தூக்கிப் பார்த்து முடிவெடுக்க வேண்டும். ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்ற கோஷத்தை மட்டுமே வைத்து முடிவு எடுக்க முடியாது என்பதால் ஏற்கெனவே விஜய் அந்தக் கோரிக்கையை கூறியபோது ஏற்க முடியாத சூழ்நிலை உருவானது. இருவரின் எதிர்கால அரசியல் எப்படி போகும் என்பதைக் கணக்கில் கொண்டு அதை ஒட்டி எங்கள் முடிவு இருக்கும். இது தொடர்பாக இடதுசாரிகளின் முடிவை அறிந்து நாங்களும் முடிவெடுப்போம், என திருமாவளவன் தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று நடைபெறுவதாக இருந்த கட்சியின் உயர்நிலை நிர்வாகிகள் கூட்டம் நடைபெறாது என கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.