சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நடப்பு நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட் நாளையும், வேளாண் பட்ஜெட் நாளை மறுநாளும் தாக்கல் செய்யப்படுகின்றன. முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் பட்ஜெட் என்பதால் மக்களைக் கவரும், குறிப்பாகப் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் தரும் புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற தவெக, கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. அக்கட்சியின் தலைவர் விஜய், முதல்வராக கடந்த மே 10-ம் தேதி பதவியேற்றார். தவெக அரசின் முதல் சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் உரையுடன் கடந்த ஜூன் 19-ம் தேதி தொடங்கியது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் ஜூன் 23-ம் தேதி வரை நடத்தப்பட்டு, பின்பு தேதி குறிப்பிடாமல் பேரவை ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து, நடப்பு 2026-27-ம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை ஆகஸ்ட் முதல் வாரத்தில் தாக்கல் செய்ய அரசு திட்டமிட்டது. அதற்கேற்ப, பட்ஜெட் முன்தயாரிப்புப் பணிகள் கடந்த 2 மாதங்களாக நடைபெற்றன. பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய புதிய திட்டங்கள், ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ள திட்டங்களின் முன்னேற்றம், பல்வேறு துறைகளின் செயல்பாடுகள், தேர்தல் வாக்குறுதிகளில் உடனே நிறைவேற்ற வாய்ப்பு உள்ள அறிவிப்புகள் ஆகியவை குறித்து முதல்வர் விஜய் தலைமையில் ஜூலை 2 முதல் 31-ம் தேதி வரை துறை வாரியாக ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.
இதற்கிடையே, சட்டப்பேரவை மீண்டும் ஆக.5-ம் தேதி கூடும் என்று பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் கடந்த ஜூலை 21-ம் தேதி அறிவித்தார். அதன்படி, நடப்பு நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் மரிய வில்சன் நாளை (ஆக.5) சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார். வேளாண் பட்ஜெட்டை துறை அமைச்சர் வினோத் நாளை மறுநாள் (ஆக.6) தாக்கல் செய்ய உள்ளார்.
தவெக அரசின் முதல் பட்ஜெட் என்பதால், பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மகளிர் உரிமைத் தொகை, பால் கொள்முதல் அதிகரிப்பு, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு, நீட் தேர்வு போன்ற விவகாரங்களில் நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்தம் கொண்டுவர வலியுறுத்துதல் போன்றவை தொடர்பான அறிவிப்புகள் இடம்பெறலாம் என்று கூறப்படுகிறது.
இதுதவிர, ‘வெற்றித் தமிழகம்’ என்ற பெயரிலான அரசின் ஐந்தாண்டு தொலைநோக்கு திட்டத்தில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.7,000 கோடி வட்டியில்லா கடனுதவி, கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவர நடவடிக்கை, மாணவர்கள் உயர் கல்விக்கு பிணையின்றி ரூ.20 லட்சம் வரை கல்விக் கடன், புதிய தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெறக் கூடும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.