சென்னை: ரேஷன் அரிசியை மக்கள் ஆடு, கோழிக்குத் தீவனமாகத்தான் பயன்படுத்துகின்றனர் என்று அமைச்சர் செங்கோட்டையன் பேசியதற்கு, ஏழைகள் சாப்பிடும் உணவைக் கொச்சைப்படுத்துவதா என எ.வ.வேலு, கே.என்.நேரு உள்ளிட்ட திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனிடையே, அனைவரும் உண்ணும் வகையில் சன்ன ரக அரிசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதிலளித்தார்.
சட்டப்பேரவையில், அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், ரேஷனில் அரிசி வாங்கும் அனைவரும் ஆடுக்கும் கோழிக்கும்தான் தீவனமாக பயன்படுத்துகிறார்கள் என்பது நாடு அறிந்த உண்மை” என்று தெரிவித்தார். பின்னர், என்ன அர்த்தத்தில் அப்படி சொல்கிறார். ரேசன் அரிசியை தற்போது அனைத்து மக்களும் பயன்படுத்தி கொண்டிருக்கிறார்கள் என முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்தார்.
அதைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில், “திமுக ஆட்சியின் ரேசன் அரிசி திட்டத்தை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பாராட்டினர். எதிர்க்கட்சியாக இருந்த போது ரேசன் அரிசியை பற்றி பேசியுள்ளாரா செங்கோட்டையன். அவை முன்னவராக இருப்பவர் அவைத் தலைவருக்கு உறுதுணையாக இருந்து அவையை சுமுகமாக நடத்த உதவ வேண்டும். ஆனால், அவரே பிரச்சினையை உண்டாக்கிவிட்டால் எப்படி? ஏழைகள் சாப்பிடும் ரேசன் அரிசியை ஆடு, மாடு சாப்பிடுவதாக கொச்சைப் படுத்தலாமா” என்று கேள்வி எழுப்பினார்.
பின்னர், முன்னாள் அமைச்சர் அண்ணன் நேரு கூட சுகர் குறைய வேண்டும் என ரேஷன் அரிசி தான் சாப்பிடுகிறார் என முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார். இதனிடையே, ரேஷன் அரிசி இதற்கு முன் எப்படி வேண்டுமானாலும் இருந்திருக்கலாம். ஆனால் இனிமேல், மக்கள் பயன்படுத்தும் வகையில் அது இருக்கும் என உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், “எங்களது குடும்பம் ரேஷன் கடையில்தான் அரிசி வாங்கி சாப்பிட்ட குடும்பம். ஆனால் இப்போது ரேஷன் அரிசியை யாரும் பெரும்பாலும் சாப்பிடுவதில்லை; அதனை இட்லி மாவுக்கு பயன்படுத்துகின்றனர். ரேஷன் கடையில் கொடுக்கும் அரிசியை சாப்பிடக் கூடிய அரிசியாக மாற்ற வேண்டும் என்று முதல்வர் விஜய் முயற்சி எடுத்தார்.
இதற்காகத்தான் சன்ன ரக அரிசியின் உற்பத்தியை அதிகரித்து கொள்முதல் செய்ய அதிகமான ஊக்கத்தொகையை முதல்வர் அறிவித்திருக்கிறார்” என்றார்.