ஓபிஎஸ் உடன் தினகரன் | கோப்புப் படம்

 
தமிழகம்

“ஓபிஎஸ் பற்றி ஒருபோதும் தரக்குறைவாக விமர்சித்தது இல்லை” - தினகரன் விளக்கம்

அ.அருள்தாசன்

திருநெல்வேலி: “எந்தக் கட்சியில் இணைவது அல்லது யாருடன் கூட்டணி அமைப்பது என்பது ஓபிஎஸ்ஸின் தனிப்பட்ட விருப்பம் சார்ந்த உரிமை” என்று அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

திருநெல்வேலியில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “ஓபிஎஸ் மீது தனக்கு எப்போதும் தனிப்பட்ட மரியாதை உண்டு. எந்தக் கட்சியில் இணைவது அல்லது யாருடன் கூட்டணி அமைப்பது என்பது அவரது தனிப்பட்ட விருப்பம் சார்ந்த உரிமை. அவரைப் பற்றி ஒருபோதும் நான் தரக்குறைவாக விமர்சித்தது இல்லை.

அண்மையில் சட்டப் பேரவையில் சட்டப் பேரவை உறுப்பினர் ஐயப்பன் பேசும்போது, தமிழக முதல்வர் ஸ்டாலின், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் ஆசியுடன் வெற்றி பெற்றதாகப் பேசியது, அந்த இரு பெரும் தலைவர்களின் புகழுக்கு இழைக்கப்பட்ட அவமதிப்பு என்பதை சுட்டிக்காட்டியிருந்தேன்.

அந்தப் பேச்சை எக்காரணம் கொண்டும் உண்மையான தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அந்த தலைவர்களின் கொள்கைகளுக்கு எதிரானவர்களோடு அவர்களை தொடர்புபடுத்துவது கண்டிக்கத்தக்கது.

          

மத்திய அரசின் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் ஈடுபடும் குற்றச் செயல்கள் 47 சதவீதம் அதிகரித்துள்ளது. இதற்கு பின்னால் உள்ள முக்கியக் காரணி போதைப் பொருட்களின் தடையற்ற புழக்கம்.

திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் அண்மையில் நடைபெற்ற கொலைச் சம்பவங்களில் பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கையில் கத்தியுடன் ஈடுபடுவதும், ஆசிரியர்களைத் தாக்கும் துணிச்சலைப் பெற்றிருப்பதும் தமிழகம் எத்தகைய மோசமான சூழலை நோக்கிச் செல்கிறது என்பதை காட்டுகிறது. தமிழகம் அமைதிப் பூங்காவாக இருப்பதாக முதல்வர் கூறுவது வெறும் காகித அறிக்கை மட்டுமே. உண்மையில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களால் தமிழகத்தின் எதிர்காலத் தலைமுறை சீரழிந்து வருகிறது.

தமிழக அமைச்சரவையில் செல்வாக்கு மிக்க அமைச்சராக உள்ள கே.என்.நேருவின் கட்டுப்பாட்டில் இருக்கும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் வரலாறு காணாத ஊழல் நடைபெற்றுள்ளது. இத்துறையில் பணியிட மாற்றங்கள் மற்றும் பதவி உயர்வுகளுக்காக ரூ.7 லட்சம் முதல் 1 கோடி ரூபாய் வரை லஞ்சம் பெறப்படுகிறது. இதன் மூலம் ரூ.2,500 கோடி ரூபாய் வரை முறைகேடுகள் நடந்திருப்பதாக அமலாக்கத் துறை ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த ஊழல் பணத்தின் ஒரு பகுதி திமுகவின் கட்சி மாநாடுகளைப் பிரம்மாண்டமாக நடத்துவதற்கும், கட்சி வளர்ச்சிக்காகவுமே பயன்படுத்தப்படுகிறது. ஆளுங்கட்சியின் நிர்வாகத் திறமையின்மையால் மாநிலத்தின் கடன் சுமை அபாயகரமான நிலையை எட்டியுள்ளது. பழனிசாமி ஆட்சியின் இறுதியில் ரூ.4.5 லட்சம் கோடியாக இருந்த தமிழகத்தின் கடன், திமுக ஆட்சியில் ரூ.5 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

வரும் 2027-ம் ஆண்டில் தமிழகத்தின் கடன் ரூ.10.71 லட்சம் கோடியாக உயரும் என அரசே தெரிவித்துள்ளது. இவ்வளவு பெரிய தொகையைக் கடனாகப் பெற்று அந்தப் பணத்தை மக்கள் நலத் திட்டங்களுக்குப் பயன்படுத்தாமல், முறைகேடுகள் மூலம் வீணடித்து வருகிறார்கள். மக்கள் வரிப்பணம் வட்டி கட்டுவதற்கே பெரும் அளவில் செலவிடப்படுகிறது.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி. திமுக அரசு மக்களை ஆயிரம், இரண்டாயிரம் ரூபாய்க்கு விலை கொடுத்து வாங்கிவிடலாம் என்று மனப்பால் குடிக்கிறது. ஆனால், மக்கள் இந்த முறை மக்கள் ஏமாற தயாராக இல்லை.

ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் அனைவரும் இப்போது ஒன்றிணைந்துள்ளனர். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலமும், தொண்டர்களின் எழுச்சியும் இந்த தீய சக்தி திமுக ஆட்சியை வேரோடு அகற்றும். தமிழக மக்கள் விரும்பும் ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சியை மீண்டும் கொண்டு வருவதே எங்களது இலக்கு” என்று அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT