கோப்புப் படம்
சென்னை: மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றியை தொழிலாளர்கள் உறுதி செய்ய வேண்டும் என தொழிற்சங்கங்கள் அறிவுறுத்தியுள்ளன.
இதுகுறித்து எல்பிஎஃப், எச்எம்எஸ், ஏஐடியுசி, சிஐடியு, ஐஎன்டியுசி உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்கள் வெளியிட்ட கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய அரசை பாஜக 3-வது முறையாக கைப்பற்றியதற்கு பின்பு, இந்தியாவை தனது ஒற்றைப் பரிமாண இந்துத்துவ சர்வாதிகாரத்தின் கீழ் கொண்டுவரும் இலக்கை நோக்கி வேகமாக நடைபோடுகிறது.
அரசியல் அமைப்புச் சட்டம் வகுத்தளித்த மாநிலங்களின் ஒன்றியம் என்ற கூட்டாட்சி முறைமையை சீர்குலைக்க அனைத்து வகையான முயற்சிகளையும் எடுத்து வருகிறது. 4 தலைமுறைகளாகப் போராடி பெற்ற வேலை பாதுகாப்பு, ஊதிய பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு ஆகியவை முற்றாக பறிக்கப்படுகின்றன.
இதற்கு ஏற்ற வகையில் தொழிலாளர் சட்டங்கள் திருத்தப்பட்டு 4 சட்டத் தொகுப்புகள் ஆக்கப்பட்டன. தமிழகத்தில் திமுக அரசு பல நலத்திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றி இருக்கிறது.
தொழிலாளர் நலன், தனியார்மயமாக்கல் போன்ற சில பிரச்சினைகள் 8 மணி நேர வேலை அதிகரிப்பு, தொழிலாளர்களை ஒப்பந்த முறையில் அமர்த்துதல், குறைந்தபட்ச ஊதிய நிர்ணயம் என்று பல முனைகளில், தொழிலாளர்களின் கோரிக்கைகள் கேட்கப்பட்டுள்ளன. சிலவற்றில் வெற்றியும் பெற்றுள்ளனர்.
நிறைவேற்றப்படாமல் இருக்கிற கோரிக்கைகளை வரும் காலங்களில் வாதாடி பெற்றுக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கைக்கு உரிய அரசாக திமுக அரசும், நமது மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியும் மட்டுமே களத்தில் உள்ளன.
அதிமுக, பாஜகவுடன் கைகோர்த்துள்ள நிலையில், இது வெறும் தேர்தல் கூட்டணி அல்ல; மாறாக, மாநில உரிமைகளைத் தாரைவார்க்கும் முயற்சி என்பது தெளிவாகிவிட்டது.
மதவெறிக்கும், சர்வாதிகாரத்துக்கும் எதிரான ஒரு மாற்றுக் குரலை உறுதிசெய்ய, ஜனநாயக சமநிலையை உருவாக்க, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு தமிழ்நாட்டின் மக்கள் வாக்களித்து பெரும் வெற்றி பெறச் செய்ய வேண்டுகிறோம்.
அனைத்து தொழிற்சங்கங்களின் நிர்வாகிகளும், தொழிலாளர்களும் தமிழக வாக்காளர்கள் அனைவரிடமும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டிய அவசியத்தை விளக்கி விரிவான தேர்தல் பரப்புரை செய்யவும், களப்பணியாற்ற வேண்டும். இவ்வாறு கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.