சென்னை: நுங்கம்பாக்கம் பகுதியில் பிரதான குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நாளை காலை 10 மணிமுதல் அடுத்த நாள் காலை 10 மணிவரை நடைபெறுவதால் 3 மண்டலங்களில் குடிநீர் விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், தேனாம்பேட்டை மண்டலம், நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலையில் பிரதான குடிநீர் குழாய் இணைப்பு பணிகளை மேற்கொள்வதால் நாளை (ஜன.30) காலை 10 முதல், அடுத்த நாள் காலை 10 மணி வரை கோடம்பாக்கம், அடையாறு, தேனாம்பேட்டை ஆகிய மண்டலங்களில் சில பகுதிகளில் குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.
அதன்படி, தேனாம்பேட்டை மண்டலத்தில் சூளைமேடு, வள்ளுவர் கோட்டம், ஆயிரம் விளக்கு, கோடம்பாக்கம் (பகுதி), நுங்கம்பாக்கம், தியாகராயநகர், கோபாலபுரம், சிஐடி காலனி, மயிலாப்பூர் (பகுதி), நந்தனம், ஆழ்வார்பேட்டை ஆகிய இடங்களிலும், கோடம்பாக்கம் மண்டலத்தில் வடபழனி (பகுதி), மேற்கு மாம்பலம், கோடம்பாக்கம், சைதாப்பேட்டை, சிஐடி நகர்.
அடையாறு மண்டலத்தில் சைதாப்பேட்டை ஆகிய இடங்களில் குடிநீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளது. எனவே பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் (Dial for Water) குடிநீர் பெற்றுக்கொள்ள வாரியத்தின் https://cmwssb.tn.gov.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி பதிவு செய்து பெறலாம்.
குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீர் தொட்டிகள் மற்றும் தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் எந்தவித தடையுமின்றி வழக்கம்போல் சீரான முறையில் மேற்கொள்ளப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.