வாடிப்பட்டி -தாமரைப்பட்டி இடையேயான மதுரை வெளிவட்டச் சாலையில் அமைந்துள்ள இலவன்குளம் சுங்கச்சாவடி.
படம்: நா.தங்கரத்தினம்
மதுரை: மதுரை வாடிப்பட்டி-தாமரைப்பட்டி இடையிலான மதுரை வெளிவட்டச்சாலை பயன் பாட்டுக்கு வந்த ஒரே வாரத்துக் குள் சுங்கக் கட்டணத்தை உயர்த்தியுள்ளதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மதுரை-திண்டுக்கல், மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் வகையில் ரூ.1,024 கோடியில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் வாடிப்பட்டி-தாமரைப்பட்டி இடையே மதுரை வெளிவட்டச் சாலை 29.960 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ளது.
இதில் அலங்காநல்லூர் அருகே இலவன்குளத்தில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த நான்கு வழிச்சாலை ஜூலை 15-ம் தேதி முதல் பயன் பாட்டு்க்கு திறக்கப்பட்டு அன்று முதலே சுங்கக் கட்டணமும் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஜூலை 22-ம் தேதி முதல் இலவன்குளம் சுங்கச்சாவடியில் வசூலிக்கப்படும் கட்டணத்தை உயர்த்தி இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி, கார், ஜீப், வேன் போன்ற இலகு ரக வாகனம் ஒருமுறை பயணிக்க புதிய கட்டணமாக ரூ.60 (பழைய கட்டணம்-ரூ.55), 24 மணி நேரத்துக்குள் திரும்பிவர ரூ.90 (ரூ.85), ஒரு மாதத்துக்கு 50 தடவைகள் பயணம் செய்ய வழங்கப்படும் மாதாந்திர கட்டணம் ரூ.1,950 (ரூ.1,895), இலகுரக வணிக வாகன வகை, இலகு பொருள் வாகனம் அல்லது மினி பஸ் ஒருமுறை பயணிக்க கட்டணம் ரூ.95 (ரூ.90), மாதாந்திர கட்டணம் ரூ.3,155 (ரூ.3,060), பஸ் அல்லது டிரக் (2 அச்சுகள்) ஒருமுறை பயணிக்க கட்டணம் ரூ.200 (ரூ.190), 24 மணி நேரத்துக்குள் திரும்பவர கட்டணம் ரூ.295 (ரூ.290), மாதாந்திர கட்டணம் ரூ.6,605, (ரூ.6,410), வணிக வாகனங்களின் ஒருவழி பயணக் கட்டணம் ரூ.100 (ரூ.95) என உயர்த்தி அறிவிக்கப் பட்டுள்ளது.
இந்த வெளிவட்டச் சாலை பயன்பாட்டுக்கு வந்த ஒரே வாரத்துக்குள் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது வாகன ஓட்டிகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
இதுகுறித்து இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் கூறுகையில், ஆணையத்தின் உத்தரவுப்படி கட்டணம் உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது, என்றனர்.