சென்னை: அரசு துறைகளில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ள நிலையில், வெறும் 41 காலியிடங்களை நிரப்ப குரூப்-2 தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பது டிஎன்பிஎஸ்சி தேர்வர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
ஒருங்கிணைந்த குரூப்-2, குரூப்-2 ஏ தேர்வுக்கான அறிவிப்பினை டிஎன்பிஎஸ்சி நேற்று முன்தினம் வெளியிட்டது. அதில் குரூப்-2 பதவிகளில் 41 காலியிடங்களும், குரூப்-2 ஏ பதவிகளில் 780 காலியிடங்களும் இடம்பெற்றுள்ளன. குரூப்-2 பதவிகளில் இடம்பெற்றுள்ள உதவி தொழிலாளர் ஆய்வாளர், சார்-பதிவாளர், துணை வணிக வரி அதிகாரி, தலைமைச் செயலக உதவி பிரிவு அலுவலர் உள்பட 14 விதமான பதவிகளிலும் காலியிடங்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தில்தான் உள்ளன.
அரசு துறைகளில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ள சூழலில் வெறும் 41 காலியிடங்களை நிரப்புவதற்காக டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பது அவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் கூறியதாவது:
அரசு துறைகளில் லட்சக்கணக்கான காலியிடங்கள் இருப்பதாக அரசு ஊழியர் சங்கங்கள் கூறுகின்றன. ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக, மூன்று நான்கு பேர் செய்யக்கூடிய அலுவல்களை ஒரே ஊழியர் செய்ய வேண்டியுள்ளது. இதனால், அரசு ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளது.
முதல்வருக்கு வேண்டுகோள்
அரசு துறைகளில் உள்ள அனைத்து காலிப்பணியிடங்களும் விரைந்து நிரப்பப்படும் என தவெக தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது. அதன் அடிப்படையில், அதிக எண்ணிக்கையிலான தேர்வர்கள் எழுதக்கூடிய குரூப்-4 , குரூப்-2 தேர்வுகளுக்கு காலிப்பணியிடங்கள் அதிகம் நிரப்பப்படும் என எதிர்பார்த்தோம்.
ஆனால், எங்கள் நம்பிக்கைக்கு நேர் மாறாக குரூப்-2 தேர்வு மூலம் வெறும் 41 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஒருங்கிணைந்த குரூப்-2 தேர்வு மூலம் குறைந்தபட்சம் 2 ஆயிரம் காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்த்தோம். ஆனால், குரூப்-2 தேர்வு மூலம் 41 காலியிடங்களும், குரூப்-2 ஏ தேர்வு மூலம் 780 காலியிடங்களும் என இரு தேர்வுகளும் சேர்த்து 821 பணியிடங்கள்தான் நிரப்பப்பட உள்ளன.
சாதாரணமாக குரூப்-2 தேர்வுக்கு சுமார் 8 லட்சம் பேர் விண்ணப்பிக்கிறார்கள். இத்தனை பேர் விண்ணப்பிக்கக்கூடிய தேர்வுக்கு வெறும் 41 காலியிடங்களே அறிவிக்கப்பட்டிருப்பது எங்களுக்கு மிகுந்த ஏமாற்றமாக இருக்கிறது. எனவே, குரூப்-2, குரூப்-2 ஏ தேர்வு மூலம் கூடுதல் பணியிடங்களை நிரப்ப தமிழக முதல்வர் ஆணையிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில தலைவர் த.அமிர்தகுமார் கூறும்போது, "தமிழக அரசு பணியில் அனைத்து வகை பதவிகளையும் சேர்த்தால் ஏறத்தாழ நான்கரை லட்சம் காலிப்பணியிடங்கள் வரும்.
நிதிச்செலவினங்களை குறைக்கும் நோக்கில் காலியிடங்கள் காண்பிக்கப்படுவது இல்லை. லட்சக்கணக்கானோர் எழுதும் தேர்வுக்கு குறைந்த காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்படும்போது, அது கடும் போட்டியை ஏற்படுத்தும். இரண்டு மூன்று முறை தேர்வெழுதி பணி கிடைக்காத இளைஞர்களுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு அவர்கள் தங்களுக்கு அரசு பணி கிடைக்காது என்ற நிலைக்கு வந்துவிடுவார்கள். அரசு துறைகளில் காலியிடங்கள் அதிகளவு இருப்பதால் குரூப்-2 தேர்வில் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு முன்வர வேண்டும்" என்றார்.