தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா
சென்னை: தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை மானியக் கோரிக்கை 2026-27-க்கான அறிவிப்புகளை சட்டப்பேரவையில் தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா வெளியிட்டார். அதில் இடம்பெற்றுள்ள 23 அறிவிப்புகள்:
>> சிப்காட் தொழிற்பூங்காக்களில் இயங்கும் தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் பாதுகாப்பான தங்குமிட வசதி தேவையினை பூர்த்தி செய்யும் வகையில், கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பூங்காவில் இரண்டாம் கட்டமாக 2,500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கான தங்குமிட வசதி மற்றும் கட்டிடம் ரூ.130 கோடி திட்ட மதிப்பீட்டில் பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் கட்டப்படும்.
>> சிப்காட் தொழிற்பூங்காக்களின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூக பொறுப்பு சார்ந்த முன்னெடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, தற்போதுள்ள சிப்காட் தொழிற்பூங்காக்கள் சுமார் ரூ.100 கோடி மதிப்பீட்டில் சுற்றுசூழலுக்கு உகந்த தொழிற்பூங்காக்களாக மேம்படுத்தப்படும். மேலும், பணியாளர்களின் பாதுகாப்பினை உறுதிசெய்யும் பொருட்டு குழந்தைகள் பராமரிப்பு மையங்கள் (Creches), தீயணைப்பு நிலையங்கள் மற்றும் சுகாதார மையங்கள் அமைக்கப்படும்.
>> உலகளாவிய போட்டி சூழலை எதிர்கொள்ள தொழில் நிறுவனங்களுக்கு உதவிடும் வகையில், உடனடியாக தங்களது தொழில் நிறுவன செயல்பாட்டினை துவக்கிட ஏதுவாக, கங்கைகொண்டான் மற்றும் தூத்துக்குடி சிப்காட் தொழிற்பூங்காக்களில் ரூ.224 கோடி திட்ட மதிப்பீட்டில், பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் ஆயத்த தொழிற்கூட வசதிகள் (Plug & Play) உருவாக்கப்படும்.
>> சிப்காட் தொழிற்பூங்காக்களில், தொழில் நிறுவனங்களுக்கு மனை ஒதுக்கீடு செய்வதில் 100% வெளிப்படை தன்மையை பொருட்டு உறுதி செய்யும் பொருட்டு ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்ட மனைகள் விவரம் மற்றும் ஒதுக்கீட்டிற்கு தயாராக உள்ள காலி மனை விவரம் அதே போன்று புதியதாக உருவாகி வரும் தொழிற்பூங்காக்களின் ஒதுக்கீட்டிற்கான காலி மனை விவரம் ஆகிய அனைத்தும் டிஜிட்டல் முறையில் கொண்டுவரப்பட்டு, வெளிப்படைத்தன்மையுடன் தொழில் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்ய வழிவகை செய்யும் வகையிலும், தொழில்மனைகளை எளிதாக அடையாளம் கண்டறிந்து, பூங்காவின் அமைப்பு, உட்கட்டமைப்பு மற்றும் ஒட்டுமொத்த மேம்பாடு குறித்த முதலீட்டாளர்களுக்கு வழங்க ஒரு தெளிவான புரிதலை முப்பரிமாண காட்சிப்படுத்தலை 2 வகையிலும் ஒரு விரிவான டிஜிட்டல் தளமாக மேம்படுத்தப்படும்.
>> தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.5,000 கோடி முதலீடு ஈர்ப்பதுடன், 20,000 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், முடிவைத்தானேந்தல் பகுதியில், சுமார் 2,570 ஏக்கர் நிலப்பரப்பில் தொழிற்பூங்கா சிப்காட் நிறுவனத்தால் அமைக்கப்படும்.
>> தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.7,000 கோடி முதலீடு ஈர்ப்பதுடன், 10,000 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் சில்லாநத்தம் பகுதியில் சுமார் 1,294 ஏக்கர் நிலப்பரப்பில் மின் வாகன உற்பத்தி தொழிற்பூங்கா சிப்காட் நிறுவனத்தால் அமைக்கப்படும்.
>> விழுப்புரம் மாவட்டத்தில், ரூ.1,000 கோடி முதலீடு ஈர்ப்பதுடன், 3,200 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் ஓமந்தூர் பகுதியில் சுமார் 229 ஏக்கர் நிலப்பரப்பில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்படும்.
>> நாமக்கல் மாவட்டத்தில் ரூ.1,000 கோடி முதலீடு ஈர்ப்பதுடன், 3,500 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் லத்துவாடி பகுதியில், சுமார் 245 ஏக்கர் நிலப்பரப்பில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்படும்.
>> சிப்காட் நிறுவனம் ஜவுளி தொழில் கூட்டமைப்புகளுடன் இணைந்து ஆயத்த தொழிற்கூட வசதிகளுடன் கூடிய சிறிய ஜவுளிப்பூங்கா ஒன்றை புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் வட்டம் திரப்பிடங்கி எனும் இடத்தில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
>> சிப்காட் தொழிற்பூங்காக்களில் பாதுகாப்பு இணக்கப்பாடுகள் மற்றும் கண்காணிப்பை வலுப்படுத்தும் வகையில், மொபைல் செயலி மற்றும் இணையதளத்துடன் கூடிய டிஜிட்டல் கண்காணிப்பு அமைப்பு (Digital Monitoring System) செயல்படுத்தப்படும்.
>> தமிழ்நாட்டினை குவாண்டம் தொழில்நுட்ப பாதுகாப்பு (Quantum Safe TN) மாநிலம் என்ற நிலைக்கு கொண்டு சென்று நிதிநுட்ப நிறுவனங்கள், உலகளாவிய திறன் மையங்கள், வான்வெளி, விண்வெளி மற்றும் பாதுகாப்பு நிறுவனங்கள் ஆகிய நிறுவனங்களின் டிஜிட்டல் தரவுகளுக்கு பாதுகாப்பு வழங்க தேவையான தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்துவதற்கான ஆய்வு சுமார் ரூ.1 கோடி மதிப்பீட்டில மேற்கொள்ளப்படும்.
>> சிவகாசி, இந்தியாவின் முன்னணி பட்டாசு உற்பத்தி மையமாகத் திகழ்வதுடன், 1,000-க்கும் மேற்பட்ட உரிமம் பெற்ற உற்பத்தி அலகுகளைக் கொண்டு, ஆண்டுக்கு சுமார் ரூ.7,000 கோடி வருமானம் ஈட்டி, ஏறத்தாழ 5 லட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கு ஆதரவளித்து வருகிறது. பாதுகாப்பு, நிலைத்தன்மை, தொழில்நுட்பப் பயன்பாடு மற்றும் திறன் மேம்பாட்டை வலுப்படுத்தும் வகையில், ‘சிவகாசி பைரோடெக்னிக்ஸ் பொது வசதி மையம்’ (Sivakasi Pyrotechnics Common Facility Centre - SPCFC) அமைக்க தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் ஒரு விரிவான திட்ட அறிக்கை ரூ.2 கோடி மதிப்பீட்டில் தயாரிக்கும்.
>> தமிழ்நாட்டில் செமிகண்டெக்டர் துறையில் முதலீட்டை ஈர்ப்பதற்கு மத்திய அரசின் SEMICON 1.0 திட்டத்தில் முழுமையாக பயன்பெற இயலவில்லை. தற்போது SEMICON 2.0 திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது மாநிலத்தில் அமையவுள்ள செமிகண்டெக்டர் நிறுவனங்களின் தேவைக்கேற்ப பிரத்யேக ஊக்கத் தொகைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்படும்.
>> தமிழ்நாடு உலகளாவிய ஏற்றுமதி இயக்கம், பசுமை மாற்றம் மற்றும் ஏற்றுமதிப் போட்டித்திறன் முன்னெடுப்பு மற்றும் வளர்ந்து வரும் எதிர்காலத் தொழில்நுட்பங்களின் போக்குகள் குறித்து ஆராய ஆலோசனைக் குழு அமைக்கப்படும்.
>> உலகளாவிய திறன் மையங்கள் துறையில் தமிழ்நாட்டின் நிலையை மேலும் வலுப்படுத்தும் வகையில், தமிழ்நாடு உலகளாவிய திறன் மையங்கள் (GCC) வழித்தடம் மற்றும் வளர்ச்சித் திட்டம் ஏற்படுத்தப்படும்.
>> அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட வாரியான தொழில் வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்த, மாநில அளவிலான கண்காணிப்பு அமைப்பு ஏற்படுத்தப்படும்.
>> தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தால் செயல்படுத்தப்பட்டு வரும் MSME நிறுவனங்களுக்கான (Bill Finance-பட்டியல் நிதியுதவி) திட்டம்; பெருநகர சென்னை மாநகராட்சி, தமிழ்நாடு மின் பகிர்மான கழகம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் போன்ற ஒரு சில அரசு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட வசதி விரிவுபடுத்தப்பட்டு, இனி அனைத்து மாநில பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் விரிவுபடுத்தப்படும். இதன் மூலம் 500 MSME நிறுவனங்கள் ரூ.600 கோடி நிதியுதவி பெறும்.
>> தமிழ்நாட்டில் மகளிர் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் விதமாக ‘வெற்றி மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்’ என்ற புதிய திட்டத்தின் மூலம் தொழில் முனைவோர்களுக்கு தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி வழங்கி, குறைந்த வட்டி விகிதத்தில் கடன் உதவி, கடன் பங்களிப்பு தொகையில் சலுகை மற்றும் பிணையச் சொத்து வழங்குதலில் சலுகை ஆகிய உதவிகளுடன் மகளிர் தொழில் முனைவோர்கள் எளிதாக தொழில் கடன் உதவி பெற வழிவகை செய்யப்படும். தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் இத்திட்டத்தின் கீழ் ரூ.500 கோடி கடனுதவி வழங்கப்படும். மேற்பட்ட மகளிர் 500-க்கும் தொழில் முனைவோர்கள் பயன்பெறுவர்.
>> குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு விரைவாக மற்றும் வெளிப்படைத்தன்மையுடனான கடன் வழங்குவதற்காக தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் கடன் வழங்கும் செயல்முறைகள் முழுமையாக (End to end) மின்னணுமயமாக்கப்படும்.
>> தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் ஆண்டொன்றுக்கு 5,000 மெட்ரிக் டன் உற்பத்தி திறன் கொண்ட ‘வெற்றி நோட்டு புத்தகங்கள்’ தயாரிக்கும் தொழில் அலகு ஒன்று கரூர் மாவட்டம், மாயனூரில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
>> தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தேவையை பூர்த்தி செய்ய ஏதுவாக ஏற்கெனவே திருநெல்வேலி மாவட்டத்தில் இயக்கப்பட்டு வரும் காற்றாலைப் பண்ணைகளை புதுப்பிக்கவும், மேலும் சூரிய மின்சார மின் உற்பத்தி தயாரிக்கும் நிலையம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
>> உப்பளத் தொழிலாளர்களின் குடும்பத்திற்கு ஆண்டொன்றுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் மழைக்கால நிவாரணத் தொகை ரூ.5,000-ல் இருந்து ரூ.7,000-ஆக உயர்த்தி வழங்கப்படும்.
>> தமிழ்நாடு உப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு வரும் இருவித செறிவூட்டப்பட்ட உப்பு, ‘வெற்றி இருவித செறிவூட்டப்பட்ட உப்பு’ என்ற வணிக பெயரில் நியாய விலைக் கடைகள் மற்றும் வெளிச் சந்தைகளில் விற்பனை செய்யப்படும்.