தமிழகம்

கரூர் நெரிசல் உயிரிழப்பு விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்றிய உத்தரவை ரத்து செய்யக் கோரி தமிழக அரசு பதில் மனு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: கரூரில் தவெக பிரச்​சா​ரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்த சம்​பவம் தொடர்​பான வழக்கில் சிபிஐ விசா​ரணைக்கு மாற்​றிய உத்​தரவை ரத்து செய்​யக் கோரி தமிழக அரசு தரப்​பில் உச்ச நீதி​மன்​றத்​தில் பதில்​மனு தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளது.

கரூர் சம்​பவம் தொடர்​பாக ஓய்​வு​பெற்ற உச்ச நீதி​மன்ற நீதிபதி தலை​மை​யில் குழு அமைத்து விசா​ரிக்க தவெக நிர்​வாகி ஆதவ் ஆர்​ஜூ​னா​வும், நெரிசலில் உயி​ரிந்​த இருவரின் உறவின​ரான எஸ்​.பிர​பாகரன் என்​பவர் சிபிஐ விசா​ரணை கோரி​யும் உச்ச நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​திருந்​தனர்.

இந்த வழக்கை விசா​ரித்த உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் ஜே.கே.மகேஸ்​வரி, என்​.​வி.அஞ்​சரியா ஆகியோர் அடங்​கிய அமர்​வானது இந்த வழக்கை சிபிஐ விசா​ரணைக்கு மாற்​றி​யும் அதன் விசா​ரணையை உச்ச நீதி​மன்ற ஓய்​வு​பெற்ற நீதிபதி அஜய் ரஸ்​தோகி தலைமையிலான குழு கண்​காணிக்​க​வும் கடந்த அக்​.13 அன்று உத்​தர​வி்ட்​டிருந்​தனர். அதன்​படி சிபிஐ அதி​காரி​கள் கரூரில் சம்​பவம் நடந்த இடத்​தில் ஆய்வு மேற்​கொண்டு விசாரித்து வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில் இந்த வழக்​கில் தமிழக அரசு தரப்​பில் உச்ச நீதி​மன்​றத்​தில் தாக்கல் செய்த பதில் மனு​வில் கூறி​யிருந்த​தாவது: அரசி​யல் சார்ந்த ஒவ்​வொரு வழக்​கை​யும் சிபிஐ விசா​ரணைக்கு மாற்​றும்​படி கோர முடி​யாது. மாநில விசா​ரணை அமைப்​பு​கள் புலன் விசா​ரணையில் தோல்​வியடைந்து விட்​ட​தாக தகுந்த ஆதா​ரங்​களு​டன் நிரூபித்​தால் மட்​டுமே சிபிஐ விசா​ரணைகோர முடி​யும்.

அரசி​யல் உள்​நோக்​கம் காரண​மாக மாநிலத்​தில் ஆளும் கட்​சிகள் மீது பொத்​தாம் பொது​வாக குற்​றச்​சாட்​டு​களை முன்​வைப்​பது என்​பது வழக்​க​மான ஒன்​று​தான். இது​போன்ற சம்​பவங்​களை சிபிஐ விசா​ரிக்க உத்​தர​விட்டால், மத்​திய விசா​ரணை அமைப்​பு​களை அரசி​யல் ரீதி​யாக தவறாக பயன்​படுத்த வழி​வகுக்​கும்.

மாநிலத்​தின் சுயாட்சி உரிமைக்​கும், அதி​கார பகிர்​வுக்​கும் ஊறு​விளைவிக்​கும். இந்தச் சம்​பவம் தொடர்​பாக விசா​ரணை நடத்த மூத்த ஐபிஎஸ் அதி​காரி​யான அஸ்ரா கர்க் தலை​மை​யில் சிறப்பு விசா​ரணைக் குழுவை அமைத்து சென்னை உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்ட நிலை​யில், இந்த வழக்கை உச்ச நீதி​மன்​றம் சிபிஐக்கு மாற்​றி​யிருப்​பது தவறான முன்​னு​தா​ரணத்தை ஏற்​படுத்தி விடும்.

விதி​விலக்​கான வழக்கை தவிர ஒவ்வொரு வழக்​கின் புலன்​ வி​சாரணை​யை​யும் ஓய்​வு​பெற்ற நீதிபதி கண்காணிக்க வேண்டும் எனும் கட்டாயமில்லை கரூர் சம்​பவத்​தில் தமிழக காவல் துறை சட்டப்​படி தனது கடமையை செய்​துள்​ளது. காவல்​துறை மீது பழி​போடு​வது ஏற்​புடையதல்ல.

வழக்​கின் புலன் விசா​ரணை நிறைவடை​யும்தரு​வா​யில் நெரிசலில் சிக்கி இறந்​தவர்​களின் குடும்​பத்​தினரை மாமல்​லபுரத்​துக்கு வரவழைத்து ஆறு​தல் கூட்​டம் நடத்​தக்​ கூ​டாது என தவெக-வுக்கு தடை விதிக்க வேண்​டும். தவெக தரப்​பில் ஆதவ் அர்​ஜூனா தாக்​கல் செய்​துள்ள இந்த மனு அரசியல் உள்​நோக்​கம் கொண்​டது.

எனவே கரூர் சம்​பவம் தொடர்​பான வழக்கை சிபிஐ விசா​ரணைக்கு மாற்​றி​யும், ஓய்​வு ​பெற்ற நீதிபதி தலைமையிலான குழு கண்காணிக்கும் என்ற உத்​தர​வையும் ரத்து செய்து மாநிலத்தில் சிறப்பு புல​னாய்வுக்​குழு வி​சா​ரணை​யைத்​ தொடர​வும், ஓய்​வு​பெற்​ற நீதிபதி அருணா ஜெகதீசன்​ ஆணை​யம்​ தொடந்​து செயல்​பட​வும்​ அனு​ம​தி​யளிக்​க வேண்​டும்​. இவ்​​வாறு கோரப்பட்டுள்​ளது.

SCROLL FOR NEXT