கரூர்: கரூர் தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்ப உறுப்பினர்களின் கல்வித்தகுதி உள்ளிட்ட விவரங்களை வருவாய்த் துறையினர் சேகரித்து சென்னைக்கு அனுப்பிவைத்துள்ளனர். முதல்வர் விஜய் கரூர் வரும்போது அவர்களுக்கு அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்தாண்டு செப்.27-ம் தேதி நடந்த தவெக பிரச்சார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தவெக சார்பில் தலா ரூ.20 லட்சம் நிவாரணமாக வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டது. இதையடுத்து, உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களை மாமல்லபுரத்துக்கு வரவழைத்து விஜய் ஆறுதல் தெரிவித்தார்.
இந்நிலையில், ஜூலை 10-ம் தேதி முதல்வர் கரூர் வருகை தர உள்ளார். அப் போது, ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் விழாவில் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். அப்போது, கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை முதல்வர் சந்தித்து, அவர்களின் குடும்பங்களில் தலா ஒருவருக்கு தகுதி அடிப்படையில் அரசு பணிக்கான ஆணைகளை வழங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்காக, கரூர் மாவட்ட வருவாய்த் துறை மூலம் 41 பேர் குடும்பங்களில் உள்ளவர்களின் கல்வித் தகுதி, வயது உள்ளிட்ட விவரங்களும் சேகரிக்கப்பட்டு, சென்னைக்கு அனுப்பியுள்ளதாக வருவாய்த் துறையினர் தெரிவித்தனர். இதுகுறித்து கூட்ட நெரிசலில் மனைவி, மகளை இழந்த ஏமூரைச் சேர்ந்த சக்திவேல் கூறும்போது, “கரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் எனது கல்வித் தகுதி உள்ளிட்ட விவரங்களை வழங்கியுள்ளேன்” என்றார்.