மதுரை: உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் தொடர்பாக 2 வாரங்களில் அரசாணை பிறப்பிக்கப்படும் என்று உயர் நீதிமன்றத்தில் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த உத்தரவிடக் கோரி திண்டுக்கல்லைச் சேர்ந்த பிரடெரிக் எங்கெல்ஸ் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார்.
அதில், “அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்துக்கு இதுவரை விதிமுறைகள் வகுக்கப்படவில்லை. மத்திய அரசு 2013-ல் அமைத்த ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையத்தையும் பின்பற்றவில்லை.
ஓய்வூதியத் திட்டம் தொடர்பான வல்லுநர் குழுவின் பரிந்துரைகளைப் பின்பற்றுவது தொடர்பாக அரசாணையோ, விதிமுறைகளோ வகுக்கப்படவில்லை.
இதனால், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் பலன்களைப் பெற முடியாமல் அரசு ஊழியர்கள் தவிக்கின்றனர். எனவே, பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த உத்தரவிட வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக தமிழக அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மனு மீண்டும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், கலைமதி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் காணொலி வழியாக ஆஜராகி, “தமிழக அரசு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தின் அடிப்படையில் தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத்திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டம் தொடர்பாக இரு வாரங்களில் அரசாணை பிறப்பிக்கப்படும்” என்றார். இதையடுத்து, விசாரணையை நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.