சென்னை: மாற்றுத் திறனாளிகளுக்கு டெட் தேர்ச்சி மதிப்பெண்ணை 40 சதவீதமாக குறைத்து பள்ளிக்கல்வித் துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக துறை செயலர் பா.சந்தரமோகன் நேற்று வெளியிட்ட அரசாணை: கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட அரசாணையின்படி, ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற பொதுப்பிரிவினர் 60 சதவீத மதிப்பெண்ணும் (150-க்கு 90), பிசி, பிசி-முஸ்லிம், டிஎன்சி, மாற்றுத் திறனாளிகள் 50 சதவீதமும் (150-க்கு 75), எஸ்சி, எஸ்சி-அருந்ததியர், எஸ்டி வகுப்பினர் 40 சதவீதமும் (150-க்கு 60) பெற வேண்டும்.
இந்நிலையில், ஆந்திரா, தெலங்கானாவில் இருப்பதைப் போல் மாற்றுத் திறனாளிகளுக்கான டெட் தேர்ச்சி பெண்ணை 40 சதவீதமாக நிர்ணயிக்குமாறு மாற்றுத் திறனாளிகள் நல ஆணையர் அரசுக்கு கருத்துரு அனுப்பியிருந்தார். அதனை பரிசீலித்து மதிப்பெண்ணை 40 சதவீதமாக நிர்ணயித்து அரசு ஆணையிடுகிறது.
மேலும் இந்தப் புதிய தேர்ச்சி மதிப்பெண் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடத்தப்பட்ட டெட் தேர்வுக்கும், கடந்த 13-ம் தேதி வெளியிடப்பட்டுள்ள டெட் தேர்வு அறிவிப்புக்கும் பின்பற்ற அனுமதிக்க படுகிறது. இவ்வாறு கூறியுள்ளது.
இதன்படி மாற்றுத் திறனாளிகள் பிரிவில் புதிதாக தேர்ச்சி பெறுவோர் பட்டியலை (தாள்-1 மற்றும் தாள்-2) ஆசிரியர் தேர்வு வாரியம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.