

புதுடெல்லி: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு இலவச அறிவிப்புகளை தடை செய்யக் கோரும் மனுவை விரைந்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அதிமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 உதவித் தொகை, ஆண்களுக்கு கட்டணமில்லா பயணம், 5 லட்சம் மகளிருக்கு தலா ரூ.25 ஆயிரம் மானியத்தில் இரு சக்கர வாகனம் போன்ற திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுபோல தவெக தலைவர் விஜய் எல்லா வீட்டுக்கும் மோட்டார் சைக்கிள், அனைவருக்கும் நிரந்தர வீடு உள்ளிட்டவற்றை அறிவித்துள்ளார்.
திமுகவும் கடந்த தேர்தலைப் போல இந்த தேர்தலுக்கும் இலவச திட்டங்களை அறிவித்துள்ளது. இதுபோன்ற இலவச திட்டங்களால் தமிழ்நாட்டின் கடன் சுமை 9 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. பொருளாதார வளர்ச்சி ஏற்படவில்லை. மாநில அரசுக்கு நிதிச்சுமை ஏற்படுகிறது.
எனவே இலவச வாக்குறுதிகளின் சாத்தியக்கூறுகளை நிதி ஆயோக், ரிசர்வ் வங்கி நிபுணர்களை கொண்ட சுதந்திரமான குழுவை கொண்டு ஆராய வேண்டும். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு இலவச வாக்குறுதி திட்டங்களை அரசியல் கட்சிகள் அறிவிக்க தடை விதிக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதி ஜோய்மால்யா பக்சி அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது. மனுதாரரர் சார்பில் இந்த மனுவை விசாரித்து உரிய உத்தரவு பிறப்பிக்க கோரப்பட்டது.
அப்போது தலைமை நீதிபதி, ‘‘தேர்தல் காலங்களில் இதுபோன்ற ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்படுவது நிறுத்தப்பட வேண்டும். தமிழகம் மற்றும் கேரள தேர்தலை முன்னிட்டு இதுபோன்ற ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விரைந்து விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை. உரிய நேரத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்" என்றார்.