நிதியமைச்சர் மரியவில்சன்
புதுச்சேரி: புதுச்சேரி நீதிமன்றத்தில் தமிழக நிதியமைச்சர் மரியவில்சன் நேற்று ஆஜராகவில்லை. தாக்குதல் வீடியோ வெளியான விவகாரம் குறித்து புதிய மனுவை அமைச்சர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீதான விசாரணை வரும் 11-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
நிதியமைச்சர் மரியவில்சன், கடந்த 2022-ம் ஆண்டு ஆக.8-ம் தேதி புதுச்சேரி, எழில் நகரில் வசித்து வரும் அவரது சகோதரர் மரியகுளோத் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று அவரையும் அவரது மனைவி கெரோலினையும் தாக்கியதாக லாஸ்பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்திருந்தனர். புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் (ஜேஎம் 1) விசாரணையில் உள்ள இந்த வழக்கில், குற்றப்பத்திரிகை தாக்கல் பெற ஆஜராக உத்தரவிட்டபோதும், மரியவில்சன் தொடர்ந்து ஆஜராகாமல் இருந்து வந்தார்.
சென்னை உயர் நீதிமன்றமானது அமைச்சரை புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டது. இதையடுத்து இவ்வழக்கில் கடந்த 4-ம் தேதி தமிழக நிதியமைச்சர் மரியவில்சன் முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகி குற்றப்பத்திரிக்கையை பெற்றுக்கொண்டார். அதைத்தொடர்ந்து இவ்வழக்கு விசாரணை நீதிபதி சந்திரசேகர் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அமைச்சர் மரியவில்சன் நேற்று புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
லாஸ்பேட்டை போலீஸார் பதிவு செய்துள்ள வழக்கில் அமைச்சருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள சில சட்டப்பிரிவுகளை ரத்து செய்யுமாறு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதற்கான பதில் மனு நேற்று அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருக்கும்போது நடந்த சம்பவம் தொடர்பாக வீடியோவை ஊடகங்களுக்கு அளித்துவிட்டதாகக் கூறி சகோதரர் மனைவி மீது நீதிமன்ற அவமதிப்பு கோரி மனுவை தமிழக அமைச்சர் மரியவில்சன் தரப்பில் தாக்கல் செய்தனர். “அது நீதிமன்ற அவமதிப்பில் வராது” என்று அமைச்சரின் சகோதரர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இருதரப்பு வழக்கறிஞர்களும் வாதிட்டனர். இந்த இரு மனுக்கள் தொடர்பான வழக்கு விசாரணை வரும் 11-ம் தேதி நீதிபதி தள்ளிவைத்தார். அன்றைய தினம் இந்த மனுக்கள் மீதான விசாரணை நடக்கவுள்ளது.