அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரம்

 
தமிழகம்

கன்னியாகுமரி தொகுதியில் கடும் போட்டியில் சுழலும் வேட்பாளர்கள்!

செய்திப்பிரிவு

கன்னியாகுமரி தொகுதியில் இப்போதைய எம்எல்ஏ அதிமுக தளவாய் சுந்தரம், நாகர்கோவில் மாநகர திமுக மேயர் மகேஷ் ஆகியோர் களம் இறங்கியுள்ளனர். தவெக வேட்பாளராக மாதவன், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மரிய ஜெனிபர் ஆகியோர் போட்டியிடுகின்றனர். 2,88,867 வாக்காளர்கள் கொண்ட இத்தொகுதி, குமரி மாவட்டத்தில் அதிக வாக்காளர்கள் கொண்ட தொகுதி என்ற பெருமை பெற்றது.

சுயேச்சைகள் உட்பட 14 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மாவட்டத்தில் இந்து வாக்காளர்கள் அதிகம் கொண்ட தொகுதியாக இது உள்ளது. வெள்ளாளர், நாடார், மீனவர்கள் மற்றும் பட்டியலினத்தவர் அதிகம் உள்ளனர். கீரி்ப்பாறை மற்றும் மலையோரப் பகுதிகளில் மலைகிராம மக்களும் நிறைந்துள்ளனர். இவர்களது வாக்குகளைப் பெற வேட்பாளர்கள் இரவு பகலாக சுழன்று வருகின்றனர்.

அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரம் கடந்த 5 ஆண்டுகளில் தொகுதியில் செய்த வளர்ச்சி பணிகளையும், சொந்த செலவில் கிராமங்களுக்கு செய்து கொடுத்த திட்டங்களையும் பட்டியலிட்டு ஆதரவு திரட்டி வருகிறார். இவருக்கு கன்னியாகுமரி தொகுதியில் உள்ள வெள்ளாளர் வாக்குகளும், இந்து வாக்காளர்களும் அனைத்து தேர்தலிலும் கைகொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

திமுக வேட்பாளர் மகேஷ்

அதேநேரம் திமுகவின் மகேஷ், இந்து நாடார் வாக்குகளை பெற வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்தி பணியாற்றி வருகிறார். அத்துடன் திமுக அரசின் திட்டங்களை கூறி சிறுபான்மையினர் வாக்குகளை பெறும் நம்பிக்கையில் உள்ளார். மேலும், கன்னியாகுமரி கடற்கரை கிராமங்களில் விஜய் ரசிகர்கள் அதிகம் இருப்பதால், கடந்த தேர்தல்களில் திமுகவுக்கு கைகொடுத்த அவர்களது வாக்குகள், இம்முறை தமக்கு பலம் சேர்க்கும் என தவெக வேட்பாளர் மாதவன் நம்புகிறார்.

அத்துடன் தோவாளை, ஆரல்வாய்மொழி, மருங்கூர், சுசீந்திரம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் வெள்ளாளர் சமூகத்தினர் அதிகம் இருப்பதால், அதே சமூகத்தை சேர்ந்த மாதவன் அந்த வாக்குகளைப் பெறுவதற்கு அப்பகுதிகளில் வீடு வீடாக வாக்குகள் கேட்டு வருகிறார். மீனவர் சமூகத்தை சேர்ந்த நாம் தமிழர் வேட்பாளர் மரிய ஜெனிபர் கன்னியாகுமரி கடற்கரை பகுதி மீனவர்களிடம் செல்வாக்கு மிக்கவர். கடந்த மக்களவை தேர்தலில் அதிமுக வேட்பாளரை விட மரிய ஜெனிபர் அதிக வாக்குகள் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தவெக வேட்பாளர் மாதவன்

இவரது கணவர் தீபக் சாலமன் கன்னியாகுமரி அருகே சாமிநாதபுரத்தை சேர்ந்த இந்து நாடார் சமூகத்தை சேர்ந்தவர். இதனால் அப்பகுதி வாக்குகளும் கிடைக்க வாய்ப்பு்ளளது. இவ்வாறு கன்னியாகுமரி தொகுதியில் சமூக ரீதியிலான வாக்குகள் பிரிகின்றன. தற்போது நான்கு முனை போட்டிக்கு மத்தியில், அதிமுகவின் தளவாய் சுந்தரம், திமுகவின் மகேஷ் ஆகியோரிடையேதான் பலத்த போட்டி உள்ளது.

இதில் யார் வெற்றி பெற்றாலும் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெல்வார் என்பது தற்போதைய வாக்களர்களின் பேச்சாக உள்ளது. தேர்தல் நெருங்குவதால் அனைத்து வேட்பாளர்களும் கடும் வெயிலுக்கு மத்தியில் வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.

நாதக வேட்பாளர் மரிய ஜெனிபர்

வாக்காளர்கள் விவரம்

  • ஆண்: 1,24,935

  • பெண்: 1,32,376

  • 3-ம் பாலினத்தவர்: 18

  • மொத்த வாக்காளர்கள்: 2,57,329

SCROLL FOR NEXT