சென்னை: காவல்துறையில் மட்டுமல்ல, அனைத்து துறையினராலும் மதிக்கப்பட்டவர் சீமா அகர்வால் என டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் பாராட்டு தெரிவித்தார்.
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை இயக்குநராக உள்ள ஐபிஎஸ் அதிகாரி சீமா அகர்வாலின் பணிக்காலம் வரும் 30-ம் தேதி முடிவடைகிறது. ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சீமா அகர்வால், காவல்துறையில் பல்வேறு பொறுப்புகளில் 36 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றியுள்ளார். இவரது பணிக்காலத்தை சிறப்பிக்கும் வகையில் தமிழக காவல்துறை சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் நேற்று பிரிவு உபசார நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் டிஜிபி மகேஷ்குமார் அகர்வால், சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ், ஐபிஎஸ் அதிகாரிகள், ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஏ.கே.விஸ்வநாதன், காவல்துறை அதிகாரிகள் மற்றும் அவரது குடும்பத்தினர் கலந்துகொண்டனர். சீமா அகர்வாலுக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் பேசியதாவது: சீமா அகர்வால் மூத்த அதிகாரி மட்டுமல்ல, அவரின் மனிதாபிமானமிக்க அணுகுமுறை அவரை உயர்ந்த இடத்தில் நிறுத்தியுள்ளது. எந்த பிரிவில் பணியாற்றினாலும் அதில் சிறப்பான பங்களிப்பை வழங்குவார். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நீதி வழங்க நடவடிக்கை எடுத்தார். ரயில்வே ஐஜியாக இருந்தபோது விபத்துகளை தடுக்க அதிக நடவடிக்கைகள் மேற்கொண்டார். காவல்துறையில் மட்டுமல்ல, அனைத்து துறைகளை சேர்ந்தவர்களாலும் மதிக்கப்பட்டவர் சீமா அகர்வால். இவ்வாறு டிஜிபி பேசினார்.
சீமா அகர்வால் பேசும்போது, “சட்டம் ஒழுங்கு மற்றும் புலனாய்வு பிரிவு அல்லாமல் சிறப்பு பிரிவுகளில் பணியாற்றும்போது எனக்கு தெளிவான பார்வை கிடைத்தது. தற்போது பணியில் உள்ள அதிகாரிகளுக்கு ஒன்றை கூற விரும்புகிறேன். பாதிக்கப்படும் விளிம்புநிலை மக்களுக்கு உறுதுணையாக இருக்க முடியுமா, பொதுமக்களிடம் கனிவாக இருக்க முடியுமா என்பது குறித்து நீங்களே உங்களை ஆய்வுக்கு உட்படுத்தி மக்களுக்கு சிறப்பான சேவையாற்ற வேண்டும்’’ என்றார்.