தவெக அரசின் முதல் பட்ஜெட் அடங்கிய பையுடன் முதல்வர் விஜய், நிதியமைச்சர் மரிய வில்சன்.

 
தமிழகம்

‘அண்ணன் சீர்’ முதல் ஏழைகளுக்கு ‘வெற்றி வீடு’ திட்டம் வரை: தவெக அரசின் முதல் பட்ஜெட் அம்சங்கள்

செய்திப்பிரிவு

சென்னை: தவெக அரசின் முதல் பொது பட்​ஜெட்டை நிதி​யமைச்​சர் மரிய வில்​சன், சட்​டப்​பேர​வை​யில் நேற்று தாக்​கல் செய்​தார். அதில், ரூ.812 கோடி​யில் ‘அண்​ணன் சீர்’ திட்​டம் உள்​ளிட்ட பல்​வேறு அறி​விப்​பு​கள் இடம்​பெற்​றுள்​ளன.

தமிழகத்தில் நடப்பு நிதி​யாண்​டுக்​கான (2026-27) திருத்​தப்​பட்ட பொது பட்​ஜெட்டை தாக்​கல் செய்​வதற்​காகச் சட்​டப்​பேரவை நேற்று கூடியது. தவெக அரசின் முதல் பட்​ஜெட்​டை, நிதி​யமைச்​சர் நெ.மரிய வில்​சன் தாக்​கல் செய்​தார். பேரவையில் 10.01 மணிக்கு பட்​ஜெட்டை வாசிக்​கத் தொடங்கி 12.31 மணிக்கு பட்​ஜெட் உரையை முடித்​தார்.

பட்​ஜெட்டை தாக்​கல் செய்து அமைச்​சர் மரிய வில்​சன் பேசி​ய​தாவது: ஆட்​சிக்கு வந்த 3 மாதங்​களில் பல்​வேறு மக்​கள் நலத் திட்​டங்​கள் செயல்​படுத்​தப்​பட்​டுள்​ளன. 2036-ம் ஆண்​டுக்​குள் 1.5 டிரில்​லியன் டாலர் பொருளா​தா​ரம் கொண்ட மாநில​மாகத் தமி​ழ​கத்தை மாற்​று​வதே அரசின் ‘வெற்​றித் தமி​ழ​கம் - தொலைநோக்​குத் திட்​டங்​கள்’ இலக்​கு.

இந்த பட்​ஜெட்டை மக்​கள் நலன் காக்​கும் கரு​வி​யாகப் பயன்​படுத்தி தமி​ழ​கத்​தின் எதிர்​கால வளர்ச்​சிக்கு வலு​வான அடித்​தளம் அமைத்​துள்​ளோம். மேலும், மத்​திய அரசின் நிதி பகிர்வு உட்பட மாநில அரசின் மொத்த வரு​வாய் வரவு 2026-27-ம் ஆண்​டுக்​கான பட்​ஜெட்​டில் ரூ.3,50,027 கோடி​யாக இருக்​கும் என மதிப்​பிடப்​பட்​டுள்​ளது.

புதிய திட்​டங்​கள்:

> ‘அண்​ணன் சீர்’ திட்​டத்​தின் கீழ் பெண்​களின் திரு​மணத்​துக்கு 8 கிராம் (ஒரு சவரன்) தங்கக் காசு, ஒரு பட்​டுப்​புடவை வழங்​கப்​படும். இதற்​காக ரூ.812 கோடி ஒதுக்​கப்​பட்​டுள்​ளது.

> கர்ப்​பிணி பெண்​களுக்​கான ‘தாய் கேர்’ சேவை மற்​றும் உதவி மையங்​கள் அமைக்​கப்​படும். இதில் கர்ப்​பிணி​களுக்கு உணவு மற்​றும் மருத்​துவ உதவி​கள், தொடர் மருத்​து​வக் கண்​காணிப்பு உள்​ளிட்ட சேவை​கள் வழங்​கப்​படும்.

> ஆதர​வற்ற பெண்​கள், கைம்​பெண்​கள், திருநங்​கை​கள், மாற்​றுத் திற​னாளி​களுக்கு 100 சதவீதம் மானி​யத்​தில் 5 ஆடு​கள் வழங்​கும், ‘வெற்றி மகளிர் ஆடு​கள் வளர்ப்​புத் திட்​டம்’ செயல்​படுத்​தப்​படும்.

> கல்​லூரி மாண​வர்​களின் கற்​றல் திறனை மேம்​படுத்​தும் வகை​யில் ‘வெற்றி மடிக் கணினி திட்​டம்’ ரூ.2,000 கோடி​யில் செயல்​படுத்​தப்​படும்.

> 11-ம் வகுப்பு பயிலும் 5.32 லட்​சம் மாண​வர்​களுக்கு ஹெல்​மெட் மற்​றும் வாட்​டர் பாட்​டில் வசதி​யுடன் கூடிய நவீன பிராண்​டட் மிதிவண்​டிகள் வழங்​கப்​படும்.

> வெற்றி வீடு திட்​டம் மூலம் ஊரகப் பகு​தி​களில் ஏழைகளுக்​கான வீடு கட்​டும் திட்​டத்​தின் அலகுத் தொகை ரூ.3.1 லட்​சத்​தில் இருந்து ரூ.5 லட்​ச​மாக உயர்த்​தப்​படும். முதல் ஆண்​டில் 70,000 வீடு​கள் ரூ.3,500 கோடி​யில் கட்​டப்​படும்.

> மீன்​பிடி தடை கால உதவித்​தொகை ரூ.7 ஆயிர​மாக உயர்த்​தப்​படும். இதன்​மூலம் 1.93 லட்​சம் குடும்​பங்​கள் பயன்​பெறும்.

> வீடு​களில் சோலார் பேனல் அமைக்க ரூ.1 லட்​சம் மானி​யம் வழங்​கப்​படும்.

> மாநிலம் முழு​வதும் பொது இடங்​களில் 20,000 மின் வாகன சார்​ஜிங் மையங்​கள் அமைக்​கப்​படும்.

> இந்​தி​யா​வின் முதல் பிரத்​யேக செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) மற்​றும் ‘டீப் டெக்’ நகர​மாக ‘அறிவகம்’ உரு​வாக்​கப்​படும். மேலும், தூத்​துக்​குடி, திருநெல்​வேலி ஆகிய பகு​தி​கள், ‘விண்​வெளித் தொழில் முதலீட்டு மண்​டல​மாக’ அறிவிக்​கப்​படும்.

> சென்னை பிராட்​வே​யில் 160 நீதி​மன்​றங்​களு​டன் ஒருங்​கிணைந்த நீதி​மன்ற வளாகம் ரூ.1,375 கோடி​யில் அமைக்​கப்​படும்.

> முதல் முறை ஹஜ் பயணி​களுக்​கான மானி​யம் ரூ.35 ஆயிர​மாக உயர்த்​தப்​படும்.

> காயிதே மில்​லத் நினை​வாக ஆண்​டு​தோறும் திரு​வள்​ளுவர் திரு​நாளில் புதிய விருது வழங்​கப்​படும்.

> காவிரி - வைகை - குண்​டாறு நதி நீர் இணைப்பு திட்​டம் செயல்​படுத்​தப்​படும். பெண்​ணை​யாறு - பாலாறு உள்​ளிட்ட நதிநீர் இணைப்​புத் திட்​டங்​களுக்கு ரூ.200 கோடி ஒதுக்​கீடு.

> கூவம் மற்​றும் அடை​யாறு ஆறுகளை மீட்​டெடுத்து சென்​னை​யின் அடை​யாள​மாக மாற்ற உலகளா​விய ஒப்​பந்​தப் புள்​ளி​கள் கோரப்​படும்.

> கடலூர், விழுப்​புரம் உள்​ளிட்ட 8 கடலோர மாவட்​டங்​களில் 2,500 எக்​டேர் பரப்​பள​வில் புதிய சதுப்​புநில அலை​யாத்​திக் காடு​கள் வளர்க்​கப்​படும்.

> மாநிலம் முழு​வதும் ரூ.50 கோடி​யில் 10 ஒலிம்​பிக் சிறப்பு மையங்​கள் நிறு​வப்​படும். மேலும், ரூ.42 கோடி​யில் தமிழ்​நாடு கிரா​மிய விளை​யாட்​டுப் போட்​டிகள் நடத்​தப்​படும்.

> அரசு, அரசு உதவி பெறும் பள்​ளி​களில் தின​மும் ஒரு மணி நேரம் விளை​யாட்​டுப் பாட​வேளை அறி​முகம் செய்​யப்பட உள்​ளது.

> நீட் தேர்வை ரத்து செய்​து, 12-ம் வகுப்பு பொதுத்​தேர்வு மதிப்​பெண் அடிப்​படையி​லான மருத்​து​வச் சேர்க்கை நடத்த மத்​திய அரசுக்கு வலி​யுறுத்​தப்​படு​கிறது.

> போதைப் பழக்​கத்​தில் இருந்து மீள்​வதற்​கானப் பணி​களை முன்​னெடுக்க மறு​வாழ்வு நிதி​யாக ரூ.70 கோடி ஒதுக்​கப்​படும்.

> அரசு ஊழியர்​கள் மற்​றும் ஓய்​வூ​தி​ய​தா​ரர்​களுக்கு 2031-ம் ஆண்டு வரை புதிய மருத்​து​வக் காப்​பீட்​டுத் திட்​டம் அறி​முகப்​படுத்​தப்​படும். அடிப்​படை காப்​பீடு ரூ.5 லட்​சத்​தில் இருந்து ரூ.7.5 லட்​ச​மாக உயர்த்​தப்​பட்​டுள்​ளது.

இவ்​வாறு பட்​ஜெட் உரை​யில் நிதி​யமைச்​சர் மரிய வில்​சன் அறி​வித்தார்.

சட்​டப்​பேர​வை​யில் இன்று காலை 9.30 மணிக்கு வேளாண் பட்ஜெட்டை அமைச்​சர் வினோத் தாக்​கல் செய்​கி​றார்.

SCROLL FOR NEXT